சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் பேசியது, "தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத அரசாக திமுக அரசு உள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதன் அடிப்படையில் வாக்காளர்கள் ஏமாந்த நிலையில் உள்ளனர். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு பாடப் புகட்ட வேண்டும் என்றால், எதிரணியில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே அணியாக, பிரதான எதிர்கட்சி உடன் கூட்டணி சேர்ந்து திமுகவிற்கு பாடம் கற்றுத் தர வேண்டும்" என்றார். அத்தகைய நிலை ஏற்படுமானால் மக்கள் நினைக்கும் மாற்றம் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக ஏற்படும் என்றும் பேசினார். பொதுவாகவே தமிழக அரசியலில் 50 ஆண்டாக கூட்டணியில் தான் தமிழக அரசின் வரலாறு சுழன்று கொண்டுள்ளது. 



தேர்தல் ஆணையம் பொதுவாக எல்லாம் தேர்தலுக்கும் ஒரு கோட்பாடு, காலக்கெடு கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முறையாக தேர்தலை துவங்கி, மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்து எதிர்மறை வாக்குகளை முழுமையாக பெற்று, வெற்றி பெறக்கூடிய பிரகாசமான நிலையில் நிச்சயம் அதிமுக வேட்பாளர் போட்டியிடுவார். எல்லாம் கட்சிகளுக்கும் மக்களை சந்திக்க நேரம் உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் யாரும் செய்யவில்லை, தமிழகத்தில் மணிக்குமணி, நாளுக்கு நாள் திமுகவை எதிர்த்து எதிர்மறை வாக்குகளை செலுத்த மக்கள் தயாராக உள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றக் கூடிய அரசாக தமிழக அரசு உள்ளதால் இந்த அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். உறுதியாக மக்கள் தேர்தலில் பிரதிபலிப்பார்கள்.



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவுடன் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு முதல் எல்லாம் தேர்தலிலும் தேர்தல் கூட்டணியில் உள்ளது.அது தொடர்கிறது. மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது பெரும் குறை,அதனையும் தாண்டி மக்கள் மீது குறைந்த மாதங்களிலே அதிக சுமையை ஏற்றிய அரசு இதுவரை தமிழக அரசியலில் திமுக அரசு தான். அதற்காக திமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். மின்சார வரி, வீட்டு வரி, பால் விலை உயர்வு என அடக்கிக் கொண்டே போகலாம், கணத்திலேயே பதில் சொல்ல அரசு கட்டாயத்தில் உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் குறையவில்லை. இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும் என்பது அரசுடைய கடமை. அதை சரிவர அவர்கள் செய்வதாக தெரியவில்லை இது குறித்து மக்கள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.