EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS DMK: நான்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுவதாக, அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

EPS DMK: தேர்தலுக்காக எடப்பாடி அவசரகதியில் திட்டங்களை அறிவித்ததாக, அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி மீது அட்டாக்:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல’ என்று எம்.ஜி.ஆர் பாடிய பாடல் வரிகள் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியாகப் பொருந்தும். நாளொரு நாளும் பொழுதொரு நேரமும் ’அறிக்கை அரசியல்’ நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. ’நான் ஒரு விவசாயி’ என பழனிசாமி நாவில் ஒன்று சொல்லுவார். ஆனால், நினைவில் அதற்கு மாறாக இருப்பார். அதன் பேர் உள்ளமல்ல. ’நான் ஒரு விவசாயி’ என்ற பழனிசாமியின் பழைய பம்மாத்துகள் கலைந்து நிற்பதால், அதை நிலைநிறுத்த அவர் போடும் கோமாளி வேடங்கள் எடுபடவே இல்லை.
”முகத்திரை கிழிப்பு”
ஈரோடு மாவட்டத்தில் அரசு விவசாயக் கண்காட்சி விழாவில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியும் செயல்படுத்தியும் வருவதை பட்டியல் போட்டுச் சொன்னார். அதனைப் பொறுக்க முடியாமல் பொறுமிக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி. ’’நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்’’ என்ற காமெடியைப் போல ’’நான்தான் உண்மையான விவசாயி’’ எனச் சொல்லி மக்களை ஏமாற்றும் போலி விவசாயி பழனிசாமியின் முகத்திரையை முதலமைச்சர் ஈரோட்டில் வைத்துக் கிழித்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
”தேர்தலுக்கான திட்டங்கள்”
தலைவாசலில் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ. 1,025 கோடி மதிப்பீட்டில், மிகப் பெரிய கால்நடைப் பூங்காவைத் துவக்கி வைத்தது பற்றி பழனிசாமி பெருமை அடிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஓட்டுக்காக அவசர அவசரமாகத் திட்டங்களைத் தொடங்கி வைத்தர் பழனிசாமி. முதலமைச்சரின் உதவி மையம், காவிரி – வைகை – குண்டாறு இடையே நதிகள் இணைப்புத் திட்டம் அடிக்கல், மினி கிளினிக், வன்னியர் உள் இடஒதுக்கீடு அறிவிப்பு, ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதம் முன்பு பழனிசாமி கொண்டு வந்த திட்டங்கள் அத்தனையும் தேர்தல் காலப் புஸ்வாணங்கள்.
திமுக நிறைவேற்றிய திட்டம்:
அந்த வரிசையில்தான் தலைவாசலில் கால்நடைப் பூங்காவை உருவாக்கினார். அது நிறைவடையும் முன்பே அதில் ஒரு பகுதியை 22.2.2021 அன்று திறந்து வைத்தார் பழனிசாமி. அதாவது 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான (பிப்ரவரி 26) நாளுக்கு நான்கு தினங்களுக்கு முன்பு அந்தத் திட்டத்தை அவசரகதியில் கொண்டு வந்தார். தான் கொண்டு வந்த திட்டம் எனத் தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, அந்தத் திட்டத்தை திமுக தடுத்துவிட்டது எனவும் சொல்கிறார். இந்த முரண்பாடுதான் பச்சைப்பொய் பழனிசாமியை அம்பலப்படுத்துகிறது. திட்டத்தை பழனிசாமி அரசு நிறைவேறியிருந்தால் ஏன் திமுக அரசு தடுத்து நிறுத்த போகிறது?
நீர் ஆதாரமே இல்லாத ஓர் இடத்தில் கால்நடைப்பூங்காவை அமைக்கும் முடிவைக் கடந்த 2019-ல் அறிவித்து, 2 ஆண்டுகள் ஆகியும் 50 சதவீதப் பணிகளைக்கூட முடிக்காமல் பாதியிலேயே விட்டுச் சென்றார் பழனிசாமி. .ஆனால், திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததும் நீர் ஆதாரச் சவால்களையெல்லாம் சமாளித்து, உயர்மின் அழுத்த வேலிகள் அமைப்பது உள்ளிட்ட மீதமுள்ள 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகளை முடித்து தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்து வைத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். விவசாயிகள் நலனுக்காகத் தனி விவசாய பட்ஜெட்டையே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நடைமுறையைக் கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட அரசு, விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை எப்போதும் நிறுத்தியதில்லை.
”போலி விவசாயி”
’நான் ஒரு விவசாயி’ எனச் சொல்லி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுதான் பழனிசாமி பாணி. விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண்மை சட்டங்களைக் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து தினமும் கதாகாலட்சேபம் நடத்தியவர் பழனிசாமி. உழவர்களின் துரோகி யார்? என்பதை விவசாயிகள் நன்கு அறிவர். உழவுத் தொழிலையும், உழவர்களையும் அழித்துப் பெரு முதலாளிகள் கைகளில் விவசாயத்தை ஒப்படைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்த பச்சை துரோகிதான் பழனிசாமி.
நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். மனதில் அழுக்கை வைத்துள்ள பழனிசாமி, என்றென்றைக்கும் உலகிற்கே உயிரூட்டும் உழவர் ஆகிவிட முடியாது. போலி வேடம் போட்டு உழவர்களை ஏமாற்றும் வித்தை எல்லாம் தமிழ்நாட்டின் என்றும் பலிக்காது. வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்” என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.





















