30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அரசு கடந்த 30 நாட்களுக்குள் மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத்தொகுப்பு ரொக்கம் உள்பட ரூபாய் 9 ஆயிரம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இன்ப அதிர்ச்சியாக ரூபாய் 9 ஆயிரம்:
திமுக-விற்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக அமையும் என்று கருதப்படுகிறது. மகளிர் விடியல் பயணம், மாதந்தோறும் உரிமைத் தொகை, நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தினாலும் ஆம்ஸ்டராங் கொலை, அஜித்குமார் மரணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு என பல்வேறு விமர்சனங்களும் உள்ளது.
இந்த நிலையில், திமுக அரசு தனது நலத்திட்ட உதவிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இன்று காலை மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கிலும் ரூபாய் 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இது மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
30 நாட்களுக்குள் ரூபாய் 9 ஆயிரம்:
இதன்மூலம் கடந்த 30 நாட்களுக்குள் மட்டும் ரூபாய் 9 ஆயிரத்தை நலத்திட்ட உதவியாக திமுக ஆட்சியில் அளித்துள்ளனர். அதாவது, கடந்த மாதம் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூபாய் 3 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு தொகை கடந்த மாதம் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை முடிந்தும் ஒரு வார காலத்திற்கு இந்த பரிசுத்தொகுப்பும், ரொக்கப்பணமும் அரசால் வழங்கப்பட்டது. மேலும், மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரமும் அளிக்கப்பட்டது. தற்போது 3 மாதங்களுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகையும், கோடைகால சிறப்புத் தொகையாக ரூபாய் 2 ஆயிரமும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எதிரொலிக்குமா?
இந்த கணக்கின்படி, கடந்த 30 நாட்களுக்குள் மட்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு, மாதாந்திர மகளிர் உரிமைத்தொகை, கோடைக்கால சிறப்புத் தொகை உள்பட ரூபாய் 9 ஆயிரம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு ரொக்கப்பணமும், மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5 ஆயிரமும் மிகப்பெரிய தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
திமுக இன்று அறிவித்துள்ள ரூபாய் 5 ஆயிரத்திற்கு ரொக்கத்திற்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகிய கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.























