INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
இந்திய அளவில் பாஜகவை கொள்கை ரீதியாக கடுமையாக எதிர்த்து வரும் திமுக இல்லாமல் நடைபெறும் இண்டியா கூட்டணி கூட்டத்தில், இன்று என்ன முடிவு எடுக்கப்படப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேசிய அளவில் பாஜகவிற்கு மாற்றாக இண்டியா கூட்டணி இருந்து வந்தது. அதில், காங்கிரஸ் கட்சி முக்கிய பங்காற்றி வரும் நிலையில், அதிக எம்.பிக்களை பெற்றுள்ள திமுக முக்கிய கட்சியாக திகழ்ந்தது. ஒரு கட்டத்தில் இண்டியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும் என்ற குரல்களே எழுந்தன. ஆனால், இன்று டெல்லியில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணி கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது திமுக.
காரணம் என்ன ?
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது காங்கிரஸ். கடந்த 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணியை தொடர்ந்து 5 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ். ஆனால், தேர்தலுக்கு பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவை தெரிவித்து, திமுகவுடனான கூட்டணியை திடீரென முறித்தது அந்த கட்சி. அதோடு, முதலமைச்சராக விஜய் பங்கேற்கும் விழாவில் அந்த கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல்காந்தியே சென்னை வந்து பங்கேற்றது திமுகவை சூடேற்றியது. இதனால், காங்கிரஸ் கட்சியை கடுமையாக திமுகவினர் விமர்சிக்கத் தொடங்கினர்.
காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது – திமுக
இந்நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ள நிலையில், அதில் திமுக பங்கேற்காது என்று அறிவித்துள்ளது அக்கட்சித் தலைமை. இந்த முடிவு காங்கிரஸ் துரோகத்தால் மனக்காயம் அடைந்துள்ள திமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டின் நலன் சார்ந்து மற்ற கட்சிகள் முன் வைக்கும் முடிவுகளுக்கு திமுக குரல் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலக்கத்தில் காங்கிரஸ்
திமுகவை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் இண்டியா கூட்டணியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது இண்டியா கூட்டணியை வழிநடத்தி வருவதாக கூறிவரும் காங்கிரஸ் கட்சிக்கு கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வரும் நிலையில், திமுக, ஆம் ஆத்மி கட்சிகளின் இந்த முடிவு இண்டியா கூட்டணிக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
திமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி
அதே நேரத்தில் திமுகவை மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணக்கத்தை ஏற்படுத்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும், த.வெ.க வுடன் கூட்டணி அமைத்தது தவறான நிலைபாடு என தேசிய தலைமைக்கு அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு
குறிப்பாக, தவெக ஆட்சி இன்னும் மூன்று மாதங்கள் தாங்குமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தவெக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திமுக இப்போதே முயற்சிகளை தொடங்கிவிட்டதாகவும் அப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது காங்கிரஸ் கட்சி திமுகவுடன் சேர்ந்துகொள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே திமுகவிற்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உடையும் இண்டியா கூட்டணி?
இண்டியா கூட்டணியில் அதிக எம்.பிக்களுடன் திமுக வலிமையான கட்சியாக இருந்து வரும் நிலையில் அவர்களை ஒதுக்கிவிட்டு முக்கிய முடிவுகள் எடுப்பது எப்படி சரியான நிலைபாடாக இருக்கும் என்று இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இன்றைய கூட்டத்தில் குரல் எழுப்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அளவில் பாஜகவை கொள்கை ரீதியாக தொடர்ந்து எதிர்த்து வரும் திமுக இல்லாமல் நடைபெறும் இண்டியா கூட்டணியில் இன்று என்ன முடிவு எடுக்கப்படப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















