இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத தேமுதிக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் யாருடன் கூட்டணி வைக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுக - அதிமுக - தவெக - நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டிகள் இந்த தேர்தலில் உருவாகியிருப்பதால் இந்த தேர்தல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக யார் பக்கம்?
திமுக தனத கூட்டணியை வலுவாக வைத்துள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணியை கடந்த மாதம் வலுவாக்கியது. தவெக தனித்தே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தலில் தேமுதிக யார் பக்கம்? என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது.
திமுக - அதிமுக என்ற இரண்டு கட்சியினரிடமும் தேமுதிக-வினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், தேமுதிக-வின் நிபந்தனைகளை ஏற்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தொடர் சறுக்கல்:
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல் தேமுதிக சறுக்கல் பாதையிலே இருந்து வருகிறது. விஜயகாந்த் உடல்நலக்குறைவான முதலே தேமுதிக திக்குமுக்காடி வருகிறது. அவரது மறைவிற்கு பிறகும் விஜயகாந்த் மீதான மரியாதையால் அந்த கட்சிக்கு தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் தேமுதிக தங்களது வாக்கு சதவீதத்தை தக்க வைத்தால் மட்டுமே அவர்களால் தங்களது கட்சியினர் மத்தியில் நம்பிக்கையை விதைக்க இயலும். முரசு சின்னத்தை தக்க வைப்பதற்காக அவர்கள் 8 தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு தேமுதிக இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டியது கட்டாயமாக உள்ளது.
இரட்டை இலக்கத்திற்கு போராட்டம்:
ஆனால், அவர்களுக்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இரண்டுமே இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க தயாராக இல்லை. தற்போது திமுக-வின் கூட்டணி கதவு பெரும்பாலும் அடைத்துவிட்ட நிலையில், அதிமுக பக்கம் மட்டுமே சாத்தியமாக உள்ளது. ஆனால், அதிமுக-வில் இரட்டை இலக்கம் என்பதும் சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது.
வட தமிழகத்தில் ஓரளவு வாக்கு சதவீதத்தை தற்போதும் தக்கவைத்துள்ள தேமுதிக, அதிமுக கூட்டணிக்கேச் சென்றாலும் அவர்களுக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்புகள் உள்ளது. அரசியல் களத்திற்கு புதியதாக வந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் தேமுதிக-விற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். ஆனால், வெற்றி வாய்ப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என்பதே களநிலவரம்.
பிரேமலதா முடிவு என்ன?
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிக, அடுத்து நடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு தொகுதிகளில் கூட எம்.எல்.ஏ.க்கள் இல்லாத பரிதாப நிலையில் உள்ளது. இதனால், இந்த தேர்தலில் தங்களுக்கென சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டிய கட்டாய்திலும் தேமுதிக உள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்போகிறார்? கட்சியின் எதிர்கால நலன் கருதி அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.























