Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக,  அவரது மனைவி சுனிதா எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

Continues below advertisement

”மோடிஜியின் ஆணவம்” - சுனிதா ஆவேசம்:

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அவரது மனைவி சுனிதா சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,  ” உங்களால் மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடிஜியின் அதிகார ஆணவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அனைவரையும் நசுக்க முயற்சி செய்துகொண்டுள்ளார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம்.

உங்கள் முதலமைச்சர் எப்போதும் உங்களுடன் நிற்கிறார். உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, அவருடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவர் மக்களுக்கானவர் என்பது பொதுமக்களுக்கு எல்லாருக்கும் தெரியும். ஜெய் ஹிந்த்” என சுனிதா கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது:

டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை அமைப்பு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஒன்பது சம்மன்கள் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

முதலமைச்சர் மாற்றமா?

கைதானாலும் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும், தொடர்ந்து முதலமைச்சராக செயல்படுவார் என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், சுனிதா கெஜ்ரிவால் மற்றும் கேபினட் அமைச்சர்களான அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

நீதிமன்றத்தில் ஆஜர்:

கெஜ்ரிவாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, ”மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவால் தான் மூளையாக செயல்பட்டதாகவும், 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதனை பஞ்சாப் மற்றும் கோவா தேர்தலில் பயன்படுத்தியதாகவும்” குற்றம்சாட்டியுள்ளது.