CV Shanmugam: ’’இது அதிமுக ரத்தம்; தூசிகூட படாது, இதை செஞ்சிட்டுதான் கால் வைப்போம்’’- சூளுரைத்த சி.வி.சண்முகம்
குவிந்த போலீஸார்; அதிமுக அலுவலகத்துக்கு எங்களால் எந்தவித பாதிப்பும் களங்கமும் ஏற்படாது- சி.வி.சண்முகம் சூளுரை

எந்த நிலையிலும் எந்த சூழலிலும் எந்த நேரத்திலும் அதிமுக அலுவலகம் மீது எங்களால் ஒரு தூசி படவோ, சிறிய பாதிப்பு ஏற்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சமடைந்து வருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றுமொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. எடப்பாடி அணி தவெகவை எதிர்த்து வரும் சூழலில், எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.
மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு
இதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர் அணியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவியை அதிரடியாகப் பறித்தார். அவர்களுக்கு ஆதரவான மா.செ.க்களின் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிமுகவின் சி.வி.சண்முகம் தலைமையிலான அணி வருவதாகத் தகவல் வெளியானது . இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் ரத்தம் அண்ணா திமுக ரத்தம்
நாங்கள் அதிமுக அலுவலகம் சென்று கலகம் செய்யப்போவதாகவும் அதற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். எங்கள் ரத்தம் அண்ணா திமுக ரத்தம். சாதாரணமான எங்களை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக மாற்றியது அதிமுக என்னும் மாபெரும் இயக்கம்.
எங்கள் இயக்கத்தின் கோயில்தான் அதிமுக அலுவலகம். அதிமுக தலைமை அலுவலகத்தை எங்கள் கோயிலாகத்தான் நினைக்கிறோம். எந்த நிலையிலும் எந்த சூழலிலும் எந்த நேரத்திலும் அதிமுக அலுவலகம் மீது எங்களால் ஒரு தூசி படவோ, சிறிய பாதிப்பு ஏற்படவோ அனுமதிக்க மாட்டோம்.
எங்கள் உயிர் போன பின்புதான்
நாங்கள் சட்டப்படி அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்பதை நிரூபித்தபிறகுதான் எங்களின் கால் அங்கே படும். யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. எந்த நிலையிலும் எங்கள் கோயிலுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டோம். எங்கள் உயிர் போன பின்புதான் அதிமுக அலுவலகம் மீது கால் வைக்க முடியும் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்






















