Just In





CPI Mutharasan: ”பண பலம், மிரட்டல்.. “பாஜகவுக்கு பணிந்து செல்லும் அதிமுக' - முத்தரசன் விமர்சனம்.
CPI Mutharasan: பாஜகவின் உத்தரவிற்கு அதிமுக கட்டுப்படவில்லை என்றால் பொதுச்செயலாளர் மாற்றப்படுவார். அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் விமர்சனம்.

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில 26 -வது மாநாடு வருகிற ஆகஸ்ட் 15, 16, 17, 18 ஆகிய நான்கு நாட்கள் சேலம் மாநகரில் நடைபெற இருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட அகில இந்திய பொறுப்பாளர்கள் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்றார். தொடர்ந்து, ஒன்றிய அரசாங்கம் பின்பற்றக்கூடிய கொள்கைகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் இவைகள் எல்லாம் ஒரு அச்சுறுத்தலாக தெரிகிறது. நாடு ஏதோ ஒரு ஆபத்தை நோக்கி செல்கின்றது. பாசிசம் இந்தியாவில் படம் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளையும் அழிக்கக்கூடிய ஒரு பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு அஸ்திவாரமாக விதை போட்டு வருகிறது என்றார்.

குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை என்பது 90% மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டமாகும். இது வெறும் மொழி பிரச்சனை அல்ல, பணப்பிரச்சனை அல்ல, கல்வியே இல்லாமல் செய்யும் முயற்சி ஒரே நாடு ஒரே தேர்தலின் நோக்கம் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதுதான். நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பல் பிடுங்கப்பட்டு விட்டது. வக்ஃப் போர்டு சட்டம் முற்றிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட திட்டம். இதை நிறைவேற்றிய தினத்தை கருப்பு தினமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் ஒன்பதாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்புவது நாட்டிற்கு நல்லது என்ற அவர், பாஜகவின் சூழ்ச்சியை வஞ்சகத்தை புரிந்து கொள்ளாமல் சில கட்சிகள் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இறையாகிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம், பண பலம், மிரட்டல் இவற்றை கொண்டு எல்லா கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது பாஜக.பாசிசம் இந்தியாவில் படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் இந்த நடவடிக்கை பேராபத்தாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது என்றார்.
நாக்பூருக்கு சென்ற மோடி, மிகச் சிறந்த சேவை இயக்கம் ஆர்எஸ்எஸ் என்று கூறுகிறார். கலாச்சாரத்தைக் காக்கும் ஆலமரம் ஆர்.எஸ்.எஸ் என்கிறார். காப்பாற்றவும் இல்லை ஆழமரமும் இல்லை. மரங்களிலே முளைக்கும் புல்லுருவி. புல்லுருவியை கண்டு கொள்ளாமல் விட்டால் பரவி மரத்தையே அழித்துவிடும். அப்படிப்பட்ட புல்லுருவி தான் ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் இன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா கட்சி என்றார்.
இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி கச்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டிடம் ஒப்படைப்பதற்கு மோடி அந்த அரசிடம் பேசினாரா? அதற்கான உத்தரவாதத்தை பெற்றாரா எனத் தெரிய வேண்டும். மீனவர்களை விடுவிக்க கூடியதாக அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது, விடுவித்தால் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் படகுகள் பறிமுதல் செய்யப்படாது. மீனவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது. தமிழக மீனவர்களின் தொழிலுக்கும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் என்று அந்த உத்திரவாதத்தை அவர் பெற்றுத் தருவாரா என்பதுதான் நம்முடைய கேள்வி என்றார்.
பாஜகவின் உத்தரவிற்கு அதிமுக கட்டுப்படவில்லை என்றால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாற்றப்படுவார். பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில் உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை. அதிமுகவை பாஜக கபளிகரம் செய்கிறது என்றார். சட்டம் ஒழுங்கு போதை பாலியல் வன்கொடுமை கொலை திருட்டு அனைத்தும் நடைபெறுகிறது. அரசு உடனுக்குடன் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்த வருகிறது என்றும் தெரிவித்தார்.