பொதுக்குழுவை கூட்டுங்க.. இல்லைனா என்ன செய்யனும்னு எங்களுக்கும் தெரியும்- இபிஎஸ்யை அலற விடும் சி.வி.சண்முகம்
தனது மகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்காக எடப்பாடி பழனிசாமி நாடகமாடுவதாக தெரிவித்துள்ள சி.வி.சண்முகம், கட்சி தோல்வி குறித்து விவாதிக்க செயற்குழுவை கூட்ட பழனிசாமி அஞ்சுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இபிஎஸ்யை நேரடியாக விமர்சித்த சி.வி.சண்முகம்
சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். இதன் காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி மீது மீண்டும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையை நேரடியாக விமர்சித்த சி.வி.சண்முகம், அதிமுக தோல்வி, கூட்டணி, தலைமையியல் குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அதிமுக நிர்வாக அமைப்புகளை உடனடியாக கூட்ட வேண்டும், அதிமுகவை காப்பாற்ற தலைமையே மாற வேண்டும் என்பதல்ல; செயல்முறை மாற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மகனை அரசியலுக்கு கொண்டுவர முயற்சி
அந்த வகையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், திமுகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டபோதே அதிமுக தனது சுயத்தை இழந்து விட்டது. கட்சியில் அனைவரும் மீண்டும் இணைந்து செயல்படலாம் என்றார்கள்; அதற்கான முயற்சி எதுவும் இல்லை, தன்னைச் சுற்றி ஒரு வேலியை போட்டுக்கொண்டு உள்ளார் எடப்பாடி பழனிசாமி, மகனை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் நேரடியாக கொண்டுவர வேண்டியதுதானே? மகனை அரசியலுக்கு கொண்டுவர நாடகமாடுகிறார் எடப்பாடி பழனிசாமி என விமர்சித்த சி.வி.சண்முகம், கட்சி தோல்வி குறித்து விவாதிக்க செயற்குழுவை கூட்ட பழனிசாமி அஞ்சுவது ஏன்? பொதுக்குழுவை கூட்ட முடியாவிட்டால் செயற்குழுவையாவது கூட்டுங்கள் என கேட்டுக்கொண்டார்.
என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும்- சிவி சண்முகம்
தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு என ஜெயலலிதா கூறியிருந்தார் ஆனால் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். அதிமுகவில் இருந்து கட்சியினர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். கட்சி வெற்றிக்காக தேவையான அனைத்தையும் செய்ய இறங்கி வர வேண்டும். மம்தா பானர்ஜியின் அரசியல் நிலை என்ன ஆனது என்பதை பழனிசாமி உணர வேண்டும். அதிமுகவை காப்பாற்ற பழனிசாமி அனைவருடனும் கலந்து பேச வேண்டும். பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அதிமுகவில் நடந்த தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும். எனவே பொதுக்குழு கூட்டத்தை கூட்டுங்கள்; இல்லையெனில் என்ன செய்வதென்று எங்களுக்கும் தெரியும் என சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்





















