"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
உயர் சாதியினருக்கு ஏற்ப மெரிட் சிஸ்டம் இருப்பதாக ராகுல் காந்தி கூறிய கருத்தை பாஜக விமர்சித்துள்ளது. இன்னமும் அவர் சாதியை பற்றி பேசி வருவதாக சாடியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக நேரடி விமர்சனம் மேற்கொண்டுள்ளது. ராகுல் காந்தி இன்னமும் சாதியை பற்றி பேசி வருவதாக பாஜக எம்.பி. தினேஷ் சர்மா சாடியுள்ளார்.
ராகுல் காந்தி மீது பாஜக விமர்சனம்:
மக்களவை தேர்தலுக்கு முன்பிலிருந்தே சாதி கணக்கெடுப்பு குறித்து தொடர் பிரச்சாரம் செய்து வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும், அதன் அவசியம் என்ன மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார்.
நாட்டில் நிலவி வரும் சமத்துவமின்மை, பாகுபாடு தொடர்பான உண்மை சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் வெளியே வரும் என ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி மீது பாஜக நேரடி அட்டாக் செய்துள்ளது.
"குறைபாடுள்ள மெரிட் சிஸ்டம்"
இதுகுறித்து பாஜக எம்.பி. தினேஷ் சர்மா கூறுகையில், "கும்பமேளாவில், யாரும் சாதி பற்றி கேட்கவில்லை. யாரும் யாரையும் அவமதிக்கவில்லை. யாருக்கும் டெங்கு அல்லது மலேரியா வரவில்லை. யாரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொள்ளவில்லை. சனாதன தர்மத்தின் வலிமையைப் புரிந்துகொண்ட பிறகும், நீங்கள் இன்னும் சாதி பற்றிப் பேசி வருகிறீர்கள். நீங்கள் (ராகுல் காந்தி) தோற்றுவிட்டீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக இழப்பீர்கள்" என விமர்சித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழு தலைவரும் கல்வியாளருமான சுக்தியோ தோரட் உடனான உரையாடலின்போது பேசிய ராகுல் காந்தி, "முற்றிலும் குறைபாடுள்ள மெரிட் அமைப்பில் எனது சமூக நிலையுடன் எனது திறனை போட்டு குழப்பிக் கொள்கிறேன்.
நமது கல்வி முறை அல்லது அதிகாரத்துவ நுழைவு முறைகள் தலித்துகள், ஓபிசிக்கள் மற்றும் பழங்குடியினருக்கு நியாயமானவை என்று யாராவது கூறினால் அது முற்றிலும் தவறு. ஏனெனில் அவர்கள் இந்த நிறுவனங்களிலிருந்து கலாச்சார ரீதியாக துண்டிக்கப்பட்டுள்ளனர். உயர் சாதியினருக்கு ஏற்பதான் மெரிட் சிஸ்டம் உள்ளது" என்றார்.