Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: தூத்துக்குடியில் இளம்பெண்ணை தவெகவைச் சேர்ந்த இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Annamalai: பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
திமுக பாணி செயல்பாடுகள்?
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்”என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் கைது..!
வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்னை ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அப்போது அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கி கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்த அந்த பெண், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குற்றவாளிகள் யாரயினும் உடனடியாக கைது செய்யப்பட்டு, உடனடியாக கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகளே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அண்ணாமலை
இதனிடையே, டெல்லியில் உள்ள அண்ணாமலை பாஜக தேசிய தலைவரை நிதின் நபினை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், இதற்கு ரஜினிகாந்தின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 4ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும்போது, புதிய கட்சி அல்லது இயக்கம் தொடர்பான அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















