இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் மாற்றும்பொழுது தேசிய உணர்வு மேலோங்கும். பாரத மாதா, பாரத தேவி, பாரத தேசம் என்று சொல்கிறோமே, அதனால் பாரதம் என்பதே சரியானது என்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

 

தமிழிசை சௌந்தர்ராஜன்

 

தெலுங்கானாவில் இருந்து சென்னை திரும்பிய மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தியா பாரதம் என்று மாற்றப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. உயர் மட்டக் குழு அப்படி ஒரு பரிந்துரையை கொடுத்திருக்கிறது.

 

நாம் கூட பாரதமாதா என்றுதான்

 

பாரதியார் கூட, பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் என்றுதான் பாடியிருக்கிறார், நாம் கூட பாரத மாதா என்றுதான் சொல்கிறோம். இந்திய மாதா என்று சொல்வதில்லை. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரதம் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் பாரதம் அல்லது இந்தியா என்றுதான் சரத்து சொல்லப்பட்டிருக்கிறது.

 

பாரத மாதா, பாரத தேவி, பாரத தேசம்

 

சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றியபொழுது மொழி உணர்வு, மாநில உணர்வு, இன உணர்வு தேசிய உணர்வு இருந்ததை போல், இந்தியா என்கிற பெயரை பாரதம் என்று மாற்றும்பொழுது அதே தேச உணர்வு மேலோங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதில் பல விமர்சனம் இருக்கலாம்.  பாரதமாதா, பாரத தேவி, பாரத தேசம், என்று இருக்கும்போது பாரதம் என்பது சரி என்பது எனது கருத்து.

 

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

 

வன்முறை எங்கும் இருக்கக் கூடாது

 

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து கருத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், ’’ஆளுநர் மாளிகைக்கும் காவல்துறைக்கும் இடையே இருப்பது சட்ட ரீதியான பரிமாற்றம்.  அதை பற்றி நான் கருத்து கூற முடியாது. என்னை பொருத்தவரை வன்முறை எங்கும் இருக்க கூடாது.

 

அமைச்சர் கே.என்.நேரு சேலம் இளைஞர் அணி மாநாட்டில் பெரிய பூஜை போட்டுள்ளார். சனாதானத்தை ஒழிப்போம் என்று கூறும் அமைச்சர் உதயநிதி இந்த மாநாட்டில்தான் உரையாற்ற போகிறார், பேசுவது ஒன்றாகவும் செயல் ஒன்றாகவும் இருக்கிறது’’ என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.