நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  நெல்லை வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் தயவு செய்து வெயில் காலத்தில் ஜெயக்குமாரை பேச சொல்ல வேண்டாம். வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். ஓ பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட பிச்சைதான். இதனை பொது வழியில் கேபி முனுசாமி போன்றோர் அசிங்கமாக பேசி வருகின்றனர். அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி தற்போது கேபி முனுசாமிக்கு கிடைத்துள்ளது ஓபிஎஸ் போட்ட பிச்சை என்பதை மறந்து விடக்கூடாது. அவர் அதிமுக தனது கையில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மாயையை உருவாக்கி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் மனு தள்ளுபடி என்றதும் எடப்பாடி ஜெயித்து விட்டார் என்கின்றனர். ஆனால் அதுவல்ல நீதிமன்றம் வழிகாட்டுதலை கொடுத்துள்ளனர். எங்கு பிரதான வழக்கு பெண்டிங்கில் உள்ளதோ அங்கு போக சொல்லியிருக்கின்றனர். இதுவே புரியாமல் இரண்டு தடவை முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை, அம்மா போட்ட பிச்சை, இரட்டை இலையை கோர்ட் எங்களுக்கு கொடுத்தது என்கிறார். 


இதில் தீர்மானிக்க வேண்டியது தேர்தல் ஆணையம், தற்போது உள்ள வந்த வீட்டிற்கே துரோகம் செய்து இவ்வளவு அட்டகாசம் செய்து அதிமுக என்னது, பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமானது என சொல்லி வருகிறார் எடப்பாடி. ஓபிஎஸ் போட்ட பிச்சையால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவரை பார்த்து பேசுகின்றனர் என்றார். தொடர்ந்து சின்னத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுவதாக கேட்ட கேள்விக்கு, சின்னத்தை கையில் வைத்து கொண்டு ஈரோட்டில் என்ன கிழித்தார். வேட்பாளரும் வாபஸ் வாங்கினார். கொங்கு நாடு என போனார். கொங்குல இருந்து 10, 15 எம் எல் ஏ வை அண்ணாமலை பார்சல் பன்னி தூக்கிக்கொண்டு போய்விட்டார். நிரந்தரமாக இருப்பவர்களை பற்றி மட்டுமே தற்போது பேச வேண்டும். ஜார்ஜை காலத்தில் வாக்காளர்கள் ஜெயலலிதாவை மதித்ததால் ஜானகி அம்மையார், ஜெயலலிதாவிடம் கட்சியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்று தெரிவித்தார்.


தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பார்க்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக பயணியுங்கள் அப்போஈது தான் திமுகவை வீழ்த்த முடியும் என்கின்றனர். ஓபிஎஸும் பழனிச்சாமி, வா போலாம், சமாதானம் ஆயிரலாம். கட்சி போயிரும், ஆட்சி அதிகாரத்தையெல்லாம் இழந்து விட்டோம். தொடர் தோல்விகள் ஆகிவிட்டது. வேண்டாம் நமக்குள்ள தகராறு என அன்பாக கூப்பிட்டார். ஆனால் எவ்வளவு நாள் தான் காத்திருக்க முடியும். வரவே மாட்டேன் என்றால்.. அந்த பண்பாடே தெரியாத ஒரு மனுசன் கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும் என்றார். இரட்டை இலை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் முழு அதிகாரம் தேர்தல் ஆணையம் இடமே உள்ளது.  2017 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு படி தேர்தல் ஆணையம் செயல்பட்டால் எங்களுக்கே  இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அவர்கள் தரப்பும் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளது. அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் நாங்கள் ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிட்டது போல் தனி சின்னத்தில் இருப்பது தொடர்பாக நடவடிக்கையை ஓபிஎஸ் எடுப்பார்.


கூட்டணி கட்சி சின்னத்தில் நிற்பது சரியானதாக இருக்காது என்பது எனது கருத்து. நான்கரை ஆண்டு ஆட்சி காலம் நடக்க பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. தற்போது அது முடிந்து விட்டதாக அவர் கூறுகிறார். பாஜகவுக்கும், எங்களுக்கும் எந்த உறவு முடிவும் இல்லை தற்போது வரை மக்களவையில் அதிமுகவின் எம்பி ஆகவே ரவீந்திரநாத் செயல்பட்டு வருகிறார். சிஏஏவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பது புரியாமல் இருந்து விட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக - பாமக - தேமுதிக -பாமக - தினகரன் -பாரிவேந்தர் - ஜான் பாண்டியன் உள்ளிட்ட மேலும் பல இணைந்த கூட்டணி உருவாகும். எடப்பாடி பழனிச்சாமி தனித்து விடப்பட்டு விட்டார். ஒரு வார காலமாக கடை விரித்தும் இதுவரை எந்த கட்சியும் அவரிடம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை. பாமக - தேமுதிக அசிங்கப்படுத்திவிட்டு அவர்களை அழைத்தால் எப்படி கூட்டணிக்கு வருவார்கள். ஒரு கட்சி சிதறி போனால் சிறிய கட்சிகள் கூட கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டும். மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையிலான கூட்டணி அமைய வேண்டும் என்பதே மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. சசிகலா டிடிவி ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் தெரிவித்தார்