Annamalai TTV Meeting: இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்றால் கூட்டணிக்கு வரலாம்! வைகை செல்வன் பரபரப்பு தகவல்! விஜய், நயன்தாரா பற்றிய கருத்தும்!
"அண்ணாமலை டிடிவி சந்திப்பு: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றால் கூட்டணிக்கு வரலாம் - முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தகவல்"

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அரசு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக சார்பில் திமுக அரசுக்கு எதிரான திண்ணை பிரச்சாரக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சோமசுந்தரம் மற்றும் வைகைச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்குப் பல ஆலோசனைகளை வழங்கினர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, பூத் கமிட்டி நிர்வாகிகள் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
டிடிவி தினகரன் - அண்ணாமலை கூட்டணி
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேச்சு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். டிடிவி தினகரன் - அண்ணாமலை கூட்டணி பற்றி பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் எனத் தெரிவித்தார். மேலும், டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால், அந்தக் கூட்டணிக்கு வெளியே செல்வார் என்றும், அதனால்தான் பழனிசாமியை ஏற்றுக்கொள்பவர்கள் வரலாம் என அவர் கூறியதாகவும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்றும், இது குறித்து தங்களது பொதுச் செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) முடிவெடுப்பார் என்றும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து: '200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என்ற உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்துக் கேட்டபோது, 'உதயநிதி ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார், திமுக அரசாங்கம் தூக்கத்தில் இருக்கிறது' என்று விமர்சித்தார். தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை என்றும், தமிழ்நாட்டு மக்கள் திமுகவிற்குப் பலத்த அடியை கொடுக்கப் போகிறார்கள் என்றும் கூறினார். மேலும், திமுக கூட்டணி பலமானது என்றாலும், தற்போது பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நயன்தாராவுக்கு 60 ஆயிரம் பேர் கூடினார்கள்
விஜய்யின் அரசியல் குறித்து: நடிகர் விஜய்யின் அரசியல் மற்றும் பிரசாரங்கள் குறித்து வைகைச் செல்வன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய்யின் பிரசாரங்கள் திட்டமிடப்படாத பிரசாரமாகத் தெரிகின்றன என்றும், அவர் ஒரு ‘இன்குபேட்டர் குழந்தை’ போல முழுமையாக வளர்ச்சி அடையாத தலைவர் என்றும் குறிப்பிட்டார்.
அரைகுறையாகப் பேசுவதைத்தான் அவரது தேர்தல் பிரசாரமாக மக்கள் பார்க்கிறார்கள் என்றும், அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்றும் தெரிவித்தார். பக்குவப்படாத ஒரு பிரசாரத்தைத்தான் மக்கள் பார்த்து வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும், விஜய்யின் வருகை ஒருபோதும் வாக்குகளாக மாறாது என்றும் கூறினார்.
இதற்கு ஒரு உதாரணமாக, திண்டுக்கல்லில் நயன்தாராவைப் பார்ப்பதற்காக 60,000 பேர் திரண்டதையும், சேலத்தில் கடை திறப்பு விழாவுக்காக அறுபதாயிரம் பேர் கூடியதையும் சுட்டிக்காட்டினார். 2011 தேர்தலில் வடிவேலுக்குக் கூடிய கூட்டத்தையும் குறிப்பிட்டார். நடிகர்களைப் பார்ப்பதற்காக மக்கள் கூடுவார்கள், ஆனால் அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்றுதான் கவனிப்பார்கள். கொள்கை, லட்சியம், சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்குபவர்களுக்குதான் மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
கமல்ஹாசனை கொச்சைப்படுத்தி விட்டார்கள்
பழ. கருப்பையாவின் பேச்சு குறித்து: 'விஜய்க்கு திமுகதான் மாநிலங்களவை சீட் கொடுக்கப் போகிறது' என்று பழ. கருப்பையா பேசியது குறித்துக் கேட்டபோது, இது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலைக் கொச்சைப்படுத்துகிறது என்றும், திமுகவிடம் கமல் அடிமைச் சாசனம் எழுதிவிட்டார் என்பதை இது மறைமுகமாகச் சொல்கிறது என்றும் குறிப்பிட்டார். தங்களை நம்பி வந்த ஒருவருக்கு இந்த கதிதான் என்பதை மற்ற கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.




















