சேலத்தில் முதல் பரிசுக்கான மேடை குறித்து குட்டிகதை கூறி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக, சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் நவீன இந்தியாவின் சிற்பி பாரத பிரதமர் நரேந்திர மோடி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.



அதன்பின், சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி மற்றும் சீலநாயக்கன்பட்டியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வெற்றிக் கோப்பை என்ற பெயரில் மாநில அளவிலான கபாடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இறுதி போட்டிக்கான வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி, போட்டியை துவக்கி வைத்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெறுபவர்களுக்கு மேடை அமைக்கப்பட்டு இருப்பது குறித்து குட்டிக்கதை வீரர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்தினார். அப்போது முதல் 3 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மேடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் முதல் பரிசு பெற்றவர்கள் உயரமாகவும், இரண்டாம் பரிசு பெற்றவர்கள் அதனுடன் சிறிது உயரம் குறைவாகவும், மூன்றாவது பரிசு பெற்றவர்கள் அதை விட உயரம் குறைவாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் பணிவை கற்றுக்கொடுக்கவே முதல் பரிசுக்கான உயரத்தை அதிகப்படுத்தி வைத்துள்ளார்கள்.



இதில் வெற்றி பெறும் வீரர்கள் முதலில் பணிவு, பொறுமை, விடாமுயற்சி இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இங்குள்ள வீரர் வீராங்கனைகள் இந்தியாவை எத்தனை பேர் ஆள போகிறார்கள் என்று தெரியவில்லை, அனைவருமே இந்தியாவை ஆள வேண்டும் என்பது தான் எனது விருப்பம் எனவும் பேசினார். மேலும் இந்த கபடி வீரர்கள் அனைத்து துறைகளிலும் செயலாற்ற உள்ளீர்கள், எனவே இந்த விளையாட்டு கற்றுக்கொடுக்கும் என்ற பாடம், விடாமுயற்சி, துணிவு, பொறுமை, உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வீரர் வீராங்கனைகளுக்கு அறிவுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் பாபு, சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுதிர்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.