"என் வீட்டிற்கு வந்த விஜய் என்னிடம் சொன்ன ரகசியம்!" – மேடையில் போட்டுடைத்த அன்புமணி ராமதாஸ்!
"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அனைத்து கட்சிகள் கலந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது."

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், மாநில அரசின் சார்பில் புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டம் 2008-ன் படி உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த வலியுறுத்தியும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, தமிழக வெற்றிக்கழகம், பாஜக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேரில் பங்கேற்றனர். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளால் நேரில் வர இயலவில்லை என்றாலும், இக்கூட்டத்திற்குத் தங்களது மனப்பூர்வமான ஆதரவையும், இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்ததாக பாமக அறிஞர் பாலு மேடையில் அறிவித்தார்.
தமிழகத்தின் சமூக நீதி வரலாறும் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள சவாலும்
கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவிலேயே சமூக நீதியின் பிறப்பிடமாகத் திகழ்வது தமிழ்நாடுதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 1921-ல் நீதிக்கட்சி ஆட்சியில் 100 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 1927-ல் சுப்புராயன் தலைமையிலான அரசால் அது செயல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்தார். தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் 95 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இன்னும் வகுக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு படிப்படியாக உயர்த்தப்பட்டு, 1980களில் அதிமுக அரசால் 68 சதவீதமாகவும், பின்னர் 1990களில் திமுக அரசால் 69 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது என்றார். எனினும், 1992-ல் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் மிகக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இதன் காரணமாக, 1994-ல் அப்போதைய அதிமுக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் மூலம் 69% இட ஒதுக்கீட்டை 9-வது அட்டவணையில் சேர்த்து சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆனால், 2010-ல் உச்ச நீதிமன்றம் 9-வது அட்டவணையில் உள்ளவற்றையும் தாங்கள் ஆய்வு செய்ய முடியும் எனக் கூறி, தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியதுடன், ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித் தரவுகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியதை அன்புமணி ராமதாஸ் விளக்கினார்.
அண்டை மாநிலங்களின் முன்னுதாரணமும் தரவுகளின் அவசியமும்
தற்போது 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு, புதிய வழக்குகள் வரவும் வாய்ப்புள்ளதால், நீதிமன்றம் ஏற்கும் வகையிலான புதிய தரவுகளைச் சேகரிப்பது கட்டாயம் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பை முடித்துவிட்டன என்றும்; ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தற்போது இக்கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பின் நன்மைகளுக்கு உதாரணமாக, பீகாரில் இக்கணக்கெடுப்பின் மூலம் 67 லட்சம் குடும்பங்களுக்குச் சொந்த வீடு இல்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும், கர்நாடகாவில் பட்டியலின சமூகத்திற்கான இட ஒதுக்கீடு 15-லிருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டதையும் அவர் எடுத்துக் காட்டினார். "கிடைக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுப்பதுதான் உண்மையான சமூக நீதி" என்று அவர் முழங்கினார்.
முதலமைச்சர் விஜய் அளித்த சமூக நீதி வாக்குறுதி
தமிழகத்தில் நிலவும் சமூக வேற்றுமைகளைக் களைய சாதிவாரி சர்வே எவ்வளவு அவசியம் என்பதைப் பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரில் (BC) 141 சமூகங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் (MBC) 115 சமூகங்களும், பட்டியலினத்தவரில் (SC) 76 சமூகங்களும், பழங்குடியினரில் (ST) 36 உட்பிரிவுகளும், இஸ்லாமியர்களில் 7 உட்பிரிவுகளும் உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த உட்பிரிவுகளுக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் கண்டறிந்தால் மட்டுமே உண்மையான சமூக நீதியை வழங்க முடியும் என்றார். உதாரணமாக, தமிழகத்தில் மலைக் குறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களின் கல்வி, பொருளாதார மற்றும் வீட்டு வசதி நிலை என்ன என்பது குறித்த எந்தப் புள்ளிவிவரமும் தற்போது அரசிடம் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்திற்கு வந்திருந்தபோது, அவரிடம் தமிழகத்தின் 8 கோடி மக்களின் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ளவும், முறையான மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் சாதிவாரி சர்வே எவ்வளவு அவசியம் என்பது குறித்து விரிவாகப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், "எங்கள் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையிலேயே, முதல் அறிக்கையாக சமூக நீதி அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளோம்" என்று தன்னிடம் உறுதியளித்ததாக அன்புமணி ராமதாஸ் மேடையில் பகிர்ந்துகொண்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி
பீகார் மாநிலத்தில் அண்மையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் நிராகரித்ததற்குக் காரணம், அவர்கள் வெறும் மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாக வைத்ததுதான் என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, மக்களுடைய பின்தங்கிய நிலையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தரவுகளைச் சேகரித்து இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் அறிவுரை என்றார்.
மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரச் சட்டத்தின்படி மாநில அரசுக்கே இக்கணக்கெடுப்பை நடத்தும் முழு அதிகாரம் உள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட சாதிக்கான பிரச்சினை அல்ல; அது தமிழ்நாட்டின் பின்தங்கிய சமூகங்கள் அனைத்திற்குமான சமூக நீதிப் பிரச்சினை. ஒவ்வொரு சமுதாயத்தின் படிப்பு மற்றும் பொருளாதார நிலையைத் துல்லியமாகக் கண்டறிந்து புதிய திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளர்ச்சி அடையும்" என்று கூறி, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















