திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் வட தமிழகத்தை உள்ளடக்கிய திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சார்ந்த 13 கட்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 15000 வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து கொள்ளும் பயிற்சி பாசறை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலம் நகரில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.


அப்போது பேசிய அவர் “நாடாளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் பறிக்க, அந்தத் தேர்தல் பணிக்கான தொடக்கப்புள்ளியான வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மத்திய மண்டல மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சியிலும் - தென் மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் இராமநாதபுரத்திலும் - மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான கூட்டம் திருப்பூரிலும் நடந்தது. இப்போது உங்களுடைய முகங்களை பார்ப்பதற்காகவே இந்த வடக்கு மண்டல மாநாட்டிற்கு கழகத்தின் கோட்டையாக விளங்கும் திருவண்ணாமலைக்கு நான் வந்திருக்கிறேன்.




 


தினமும் காலையில் சூரிய ஒளியை பார்க்கும்போது என்ன மாதிரியான உற்சாகம் ஏற்படுமோ, அதே மாதிரியான உற்சாகம்தான் உங்களை பார்க்கும்போதும் ஏற்படுகிறது. நீங்கள்தான் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி. திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் தி.மு.க.வும்! யாராலும் பிரிக்க முடியாது, நம்முடைய கழகம் உருவான முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் இதே திருவண்ணாமலையை சேர்ந்த நம்முடைய ப உ.சண்முகம் வழங்கியது. 1957 தேர்தலில் நாம் முதன்முதலாக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றோம். அதில், 3 பேர் இந்த மாவட்டத்துக்காரர்கள். முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றார்கள். அதில் ஒன்று, இந்த திருவண்ணாமலை தொகுதி சட்டமன்றத்துக்கு, ப.உ.சண்முகம், பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கு, தர்மலிங்கம் கொஞ்சம் நாட்களுக்கு முன்புதான் நம்முடைய வேலு சீரிய முயற்சியில் மாவட்டக் கழகம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. 1963-இல் தி.மு.க.விற்கு திருப்புமுனை தந்தது திருவண்ணாமலை இடைத்தேர்தல் அப்போது ஆளுங்கட்சி, காங்கிரஸ் நம்முடைய வேட்பாளர், ப.உ.ச. தேர்தல் பொறுப்பாளர், நம்முடைய தலைவர் கலைஞர் அன்றைக்கு திருவண்ணாமலை கொடுத்த வெற்றிதான், 1967-இல் நாம் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது.


 




அதேபோல், 2021 தேர்தலின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பயணத்தையும் இதே திருவண்ணாமலையில் இருந்துதான் நான் தொடங்கினேன். தொகுதி தொகுதியாகச் சென்று கோரிக்கை மனுக்களை வாங்கினேன். உங்கள் கவலைகளை, கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று சொன்னேன். ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு, இலட்சக்கணக்கான மக்கள் மனு கொடுத்தார்கள். அந்த அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் வெள்ளம்போல் மக்கள் திரண்டார்கள். அன்றைக்கு வெற்றித் தீபத்தைத் திமுக பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது. திருவண்ணாமலை தான் கடந்த மார்ச் 22-ஆம் நாள் அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் இருந்தே நாம் தேர்தல் பணிகளை நாம் தொடங்கிவிட்டோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்திருக்கிறோம். இதோடு நான்கு வாக்குச் சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலம் மட்டும்தான் பாக்கி இருக்கிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டார்கள். கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ள நம்முடைய இயக்கத்தில் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்’ என்ற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பெற்றிருக்கும் உங்களை எல்லாம் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.


 




 


கோடிக்கணக்கான பெண்களுக்கு பயனளிக்கும் திட்டம்தான் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்றுவரும் 1000 ரூபாய் உதவித்தொகையை 1200 ரூபாயாக ஆக்கி இருக்கிறோம். 18 லட்சம் பள்ளி மாணவ மாணவியர்க்கு காலை உணவுத் திட்டம், 13 லட்சம் பெண்களின் நகைக்கடன் ரத்து இவ்வாறு கோடிக்கணக்கான – இலட்சக்கணக்கானவர்கள் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றுகிற அரசுதான், நம்முடைய திராவிட மாடல் அரசு இதையெல்லாம் நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நம்முடைய திட்டங்கள் மூலமாக பயனடைந்தவர்கள். தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட, 5, 6 மாதங்களுக்கு முன்பு நான் சுற்றுப்பயணம் செய்தபோது இருந்த மகிழ்ச்சியைவிட, உணர்ச்சியைவிட, வரவேற்பைவிட இப்போது கடந்த 2 மாதகாலமாக எங்கு பார்த்தாலும் பெண்கள் அலைமோதுகிற அந்தக் கூட்டத்தை நான் கண்கூடாக பார்க்கிறேன். என்ன காரணம்? 1,000 ரூபாய். அது இன்றைக்கு மகளிரை ஈர்த்திருக்கிறது. வாக்களித்தவர்கள் மட்டுமல்ல - நம்மை எதிர்த்தவர்கள்கூட இப்போது பாராட்டுகிறார்கள். இது நம்முடைய எதிரிகளை அச்சமடைய வைத்திருக்கிறது.


 




சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியிருக்கிறார். பத்திரிகைகளில் படித்துப் பார்த்தேன். அது பேச்சு அல்ல, வயிற்றெரிச்சல். தன்னுடைய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டி இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கே இரண்டு மணி நேரமாகும்! அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ‘பச்சைப் பொய் பழனிசாமி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோமாம். பிளான் போட்டு, கட்டி முடித்து வைத்துவிட்டார்களாம். நாம் சென்று ரிப்பன் வெட்டிவிட்டு வந்துவிட்டோமாம். நான் கேட்கிறேன், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா? எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அன்போடு பணிவோடு கேட்கிறேன், விடியல் பயணம் – பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? காலைச் சிற்றுண்டித் திட்டம், யார் போட்ட திட்டம். புதுமை பெண் திட்டத்தில், மாணவியர்க்கு 1000 ரூபாய் தருகிறோமே, இது பழனிசாமியின் திட்டமா?இலட்சக்கணக்கான மாணவர்களை முன்னேற்றும் ’நான் முதல்வன் திட்டம்’ அ.தி.மு.க. திட்டமா? நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி - இதெல்லாம் என்ன என்றாவது பச்சைப் பொய்யர் பழனிசாமிக்கு தெரியுமா? 2 லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். இது அ.தி.மு.க. திட்டமா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்களே? இது பா.ஜ.க.வின் பாதம்தாங்கியாக இருக்கிறாரே பழனிசாமி அவரின் ஆட்சியில் நடந்ததா?




மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் பரப்புரைக் கழகம் நடத்தி வருகிறோமே! இந்த திட்டம் எல்லாம் பழனிசாமியின் கனவிலாவது வந்திருக்குமா? தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் – அருட்பிரகாச வள்ளலார் - மகாகவி பாரதியார் ஆகியோருக்கான விழாக்களை நம்மை திராவிட மாடல் அரசு நடத்துகிறதே, இவர்களின் கொள்கைகளாவது என்ன என்று கம்பராமாயணம் படித்த பழனிசாமி சொல்வாரா? வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு போராடிய இடஒதுக்கீட்டு தியாகிகளுக்கு மணிமண்டம் அமைத்து வருகிறோமே, இது அ.தி.மு.க. ஆட்சியில் போட்ட திட்டமா? ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்த பழனிசாமி தன்னுடைய ஆட்சியில் கண்டுகொண்டாரா? அரசு ஊழியராக இருக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக்கியது நம்முடைய தி.மு.க.  ஆட்சி! ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை, ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது.


 




நான்காண்டுகாலம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது மக்களுக்காக எதையுமே செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல. அதனால்தான் பொய் பொய்யாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவரின் ஆட்சியில் தமிழ்நாடு எல்லா துறைகயிலும் முதலிடம் பிடித்ததாம். பழனிசாமி சொல்கிறார். நாம் கேட்பது, சொந்தமாக விதைத்து அறுவடை செய்வதுதான் பெருமை மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும் - போராடிய ஏழை விவசாயிகளுக்கு எதிராகவும் பேசிய – போலி விவசாயி பழனிசாமிக்கு இதெல்லாம் எப்படி தெரியும். உண்மையில், அவரின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது! இதுதான் வரலாறு போதைப் பொருளான குட்கா விற்க லஞ்சம் வாங்கியதற்காக ஒரு அமைச்சர் வீட்டிற்கே ரெய்டு வந்ததை மறைக்க முடியுமா சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காக்கை குருவிகளை சுடுவது போல 13 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, டி.வி.யைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னீர்களே பழனிசாமி… உங்கள் முகத்திரைதான் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் அப்பட்டமாகக் கிழிந்து தொங்கியதே மறந்துவிட்டீர்களா


 




இதையெல்லாம் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருக்கிறார் பழனிசாமி. தி.மு.க. குடும்பக் கட்சியாம் குடும்பக் கட்சிதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். தி.மு.க. குடும்பக் கட்சிதான். கோடிக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை வாழவைக்கும் கட்சி, தி.மு.க. பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய பாதையில், ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கிய கட்சி, தி.மு.க. பச்சைப் பொய் பழனிசாமி சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து, ஹைகோர்ட் – சுப்ரீம் கோர்ட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு, குடும்பக் கட்சி என்று விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார். பா.ஜ.க. கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி ’உள்ளே வெளியே’ நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.


 




 


சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை என்று எல்லா சட்டத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் பழனிசாமி. அதை எதிர்த்த தி.மு.க.வினரைச் சட்டமன்றத்திலேயே எப்படியெல்லாம் பேசினார். பா.ஜ.க.விற்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள். என்று கேட்டார் பழனிசாமி. இப்படியெல்லாம் ஆணவத்தோடு பேசிவிட்டு, இப்போது, ‘கூட்டணி தர்மம் என்று சப்பைக்கட்டு கட்டி தன்னுடைய நாடகத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார். ஆனால் மக்கள் இப்போதும் என்ன கேட்கிறார்கள். மக்களை காவு கொடுத்துவிட்டு எதற்காக கூட்டணி வைத்தார். பா.ஜ.க.வை விமர்சிக்காமலேயே பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று அவர் போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம் இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும். தேர்தல் என்ற போர்க்களம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நிலத்தில் அதிகமான போர்கள் நடந்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். முதலாம் தெள்ளாற்றுப் போர் – இரண்டாம் தெள்ளாற்றுப் போர் – திருவண்ணாமலைப் போர் – வந்தவாசிப் போர் – தேசூர்ப் போர் – ஆரணிப் போர் – செங்கம் கணவாய்ப்போர் – சேத்துப்பட்டில் போர் என்று வரிசையாக எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்த ஊர், இந்தத் திருவண்ணாமலை வட்டாரம்.


 




 


இப்போது நாம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தல் களத்தில் நாம் காணப் போகும் வெற்றிதான் - எதிர்கால இந்தியாவிற்கு மிக மிக முக்கியம். 100 ஆண்டு காலமாக சமூகநீதியின் மூலமாக தமிழ்நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடையத் தொடங்கியது. கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எத்தனையோ முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. தொடர்ந்து இப்போது இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் கோட்பாடானது – இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படுமானால் - உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா உயரும். மக்களைப் பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் பாசிச பா.ஜ.க.விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் களத்திற்கு இந்தத் திருவண்ணாமலை பாசறைக் கூட்டமானது நல்ல வழிகாட்டியாக அமையட்டும். நிறைவாக, தீபம் தெரிவதைப் போல - இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க இந்தியா கூட்டணி வெல்க நாற்பதும் நமதே நாடும் நமதே” எனப் பேசினார்.


கழக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் பொன்முடி கே என் நேரு, சக்கரபாணி, காந்தி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.