சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் இருப்பதாகவும், அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் செய்தி வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 



இது தொடர்பாக பேசிய ஏ.வி.ராஜு, "சத்துணவு துறையில் இரண்டு பேருக்கு வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் ரூபாயும், தொழில் விசயமாக ஆக 20 லட்ச ரூபாயும் என அறுபது லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டார். இதுபோல அவர் பலரிடம் ஏமாற்றி வாங்கிய சொத்துக்கள் 800 கோடியை தாண்டும். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. திமுக அமைச்சராக இருந்த பொன்முடி மீது அமலாக்கத்துறை சொத்து குவிப்பு வழக்கு போட்டு அவரை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.


தொடர்ந்து கூறிய அவர், வெங்கடாசலம் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் நீடித்தால், இந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் அதிமுகவிற்கு குறையும் என்றும், எனவே உடனடியாக அப்பதவியில் இருந்து வெங்கடாசலத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீது அதே கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜ், வைத்துள்ள குற்றச்சாட்டு சேலத்தில் மட்டுமல்லாமல் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இது குறித்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் இடம் தொடர்புகொண்டு கேட்டபோது, எந்த தவறும் செய்யாத என் மீது அவதூறு கருத்து பேசிய ஏ.வி.ராஜு மீது தலைமை கழகத்தில் புகார் தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.



இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பில் சேலம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு, அதிமுகவின் ஒழுங்குமுறை குலைக்கும் வகையில் அதிமுக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.