Anwar Raajha: திமுகவில் ஐக்கியமான அன்வர் ராஜா.. முந்திக் கொண்ட எடப்பாடி - அதிமுக திடீர் அறிவிப்பு
ADMK Anwar Raajha: அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

ADMK Anwar Raajha: அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவதாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் அதிமுக அமைப்புச் செயலாளர்
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா (75 வயது), திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலை வருகை தந்தார். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவால், அதிருப்தி அடைந்து தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள அன்வர் ராஜா முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தெரிவிக்கின்றன. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அன்வர் ராஜா தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அண்மையில், தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது என இவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் சிறுபான்மை சமூகத்தின் முக்கிய தலைவராக கருதப்படும் அன்வர் ராஜா, அதிலிருந்து விலகுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்:
இதனிடையே, கட்சியின் அமைப்புச் செயலாளரான அன்வர் ராஜாவை கட்சியில் இருந்தே நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுப்பதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். முன்னதாக சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏற்கனவே அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். பின்பு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று செயல்பட விருப்பம் தெரிவித்து வருத்தம் தெரிவித்தால் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார். கன்னியாகுமரியை சேர்ந்த இவருக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாஜக கூட்டணியால் எழுந்த சர்ச்சையால் மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அன்வர் ராஜாவின் அரசியல் பயணம்:
அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த அன்வர் ராஜா மண்டபம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக 1986ம் ஆண்டு தொடங்கி 1991ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதன் விளைவாக ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்து, 2001ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டதுமே, அவருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து, 2014ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களை தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வானார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மன்றக் குழு, வெளியுறவு, சிறுபான்மை விவகாரங்கள் போன்ற பல்வேறு குழுக்களில் அன்வர் ராஜா இடம்பெற்று இருந்தார். கூடுதலாக, அவர் தமிழ்நாடு வக்ஃப் போரத் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கம்.. சேர்ப்பு.. நீக்கம்..
ஆரம்பம் முதலே அதிமுகவில் இருந்த அவர், கட்சி கொள்கைகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு நவம்பர் 30, 2021 அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் . தொடர்ந்து, ஆகஸ்ட் 4, 2023 அன்று, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் தான், திமுகவில் இணைய அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிலையில், உடனடியாக அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவில் இணைந்தால் சிறுபான்மை வாக்கு வங்கி வலுப்படும் எனவும், அது அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






















