முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று காலை முதலே விழாக்கோலமாக காணப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தி , இனிப்புகளை வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர்.

Continues below advertisement

பின்பு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலுக்கான 3 ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;

தேர்தல் வாக்குறுதிகள்

Continues below advertisement

1. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம் போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்து விட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.

2. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும் , +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படும்.

3. மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

4. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும்.

5. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும் ,  விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

6. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.