நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியில் பசும்பொன் தேசிய கழகம் துணைத்தலைவர் ஆதி சுப்ரமணியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இன்று வருகை புரிந்தார்,

திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ‛‛கடந்த சட்டமன்ற தேர்தலில் 505 வாக்குறுதிகளை திமுக மக்களுக்கு அளித்தனர். ஆனால் இன்று மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்ற வில்லை. ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையை தான் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள், உதாரணத்திற்கு அவர்களது ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் உதாரணம், அதிமுக பொங்கல் பரிசு தொகுப்பில் எந்த அளவிற்கு தரமான பொருட்களை வழங்கியது என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள், அதோடு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது,  ஆனால் திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களையும் பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டது.

மகளிருக்கு உழைப்பூதியமாக ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள், ஆனால் இன்னும் தரவில்லை, அதிமுக ஆட்சி காலத்தில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம்  நிதியை ஏழை மக்கள், அடித்தட்டில் வாழும் மக்களுக்கு என அவர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கென ஒதுக்கினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மேல்தட்டு மக்களுக்கு இணையாக அனைத்து நிலைகளிலும், பொருளாதார நிலைகளிலும் உட்பட கீழ்தட்டு மக்களை மேல்தட்டு மக்களுக்கு இணையாக வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும் என்று ஜெயலலிதா நல்ல பல திட்டங்களை தொலை நோக்கு திட்டங்களாக மக்கள் நல திட்டமாக நாட்டு மக்களுக்கு அர்பணித்தார் என்பது தான் வரலாறு. அந்த வரலாறை யாரும் மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது என்ற நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை என்பது தான் திமுக ஆட்சியின் வேதனையாக இருந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் விவசாயிகள்  மிகப்பெரிய வருத்தத்தில் உள்ளனர், சீராக அவர்களின் வயல்களில் உள்ள பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார், ஜெயலலிதா போல் நல்லாட்சியை  தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு , வந்தால் பார்ப்போம் எனவும் பதில் அளித்தார்