ADMK: கிழியும் இலை..! விஜய்க்காக மல்லுக்கட்டும் அதிமுக கோஷ்டி ”ஆதரவு கொடுக்குறோம், எடப்பாடிய தூக்குறோம்”
ADMK EPS Vs CVS: தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதில், அதிமுகவின் ஒரு பிரிவு மிகவும் தீவிரமாக உள்ளதாம்.

ADMK EPS Vs CVS: அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் எனவும் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனராம்.
விஜய்க்காக மல்லுக்கட்டும் அதிமுக கோஷ்டி
சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து பெரும்பான்மை பிரச்னைகளை எல்லாம் முடித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் புதிய அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுகவின் 30-க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் இரண்டாவது நாளாக நேற்று தனியே ஆலோசனை நடத்தியுள்ளனர். அதுவும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதல் இன்றி இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு தான் விஜயுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனது, எதிர்காலத்தில் அதற்கான சூழல் ஏற்பட்டால் அதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனபதே சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுகவினரின் கோரிக்கையாம்.
எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி..!
கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொண்ட எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே அடியாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலக வேண்டும் என சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளொட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனராம். அவராக விலகாவிட்டால் இதற்கான பொதுக்குழுவை கூட்டி, பதவியில் இருந்து நீக்கவும் அதிருப்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனராம். அதன் முடிவில் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படவும், அந்த பதவியை வகிக்க கால வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற குழு தலைவரான சி.வி. சண்முகம்?
தேர்தலில் தோற்ற நிலையில், தனிப்பெருன்மை பெறாத தவெக உடன் உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதிலும் எடப்பாடி பழனிசாமி தோற்றுவிட்டதாக சி.வி. சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தரப்பினரின் குற்றம்சாட்டாம். தொடர் தோல்விகள் மற்றும் அதிகாரமும் இல்லாதது கட்சியை மேலும் பலவீனப்படுத்துவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். அதிமுகவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட கொங்கு மண்டலமும் இந்த தேர்தலில் பெரிய அளவில் கைகொடுக்காதது, எடப்பாடிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 36 எம்.ல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். அதன் முடிவில் சி. வி. சண்முகம் அல்லது எஸ்.பி. வேலுமணி ஆகியோரில் ஒருவரை சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
விஜய்க்காக காத்திருக்கும் அதிமுக?
விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை உடனடியாக கண்டனமும் தெரிவித்துள்ளன. முதல்நாளே ஆதரவு கட்சிகள் கண்டனக்குரல் எழுப்பியதால், விஜய் தலைமையிலான மைனாரிட்டி அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்குமா? என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவுகிறது. திமுகவின் கூட்டணியில் இதுநாள் வரை தொடர்வதாக அறிவித்துள்ள விசிக எப்போது வேண்டுமானாலும் ஆதரவை பின்வாங்கலாம் என்ற சூழலும் நிலவுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் விஜய்க்கு ஆதரவு கொடுத்து அரசை நிலையாக்கி, தங்களுக்கான ஆட்சி அதிகாரத்தை பெற அதிமுகவின் சி.வி. சண்முகம் கோஷ்டி தயாராக உள்ளதாம். இதனால், மீண்டும் அந்த கட்சி இரண்டாக உடைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















