சட்டமன்ற நேரலை: ஆதவ் ஆர்ஜுனா வலியுறுத்தல்! திமுக அரசை விமர்சித்து பரபரப்பு பேச்சு!
"தமிழ்நாட்டில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என ஆதவ் ஆர்ஜுனா தெரிவித்துள்ளார்."

தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: திமுக தனது தேர்தல் அறிக்கையில் அடுத்த 5 ஆண்டுகளில் 18.75 லட்சம் அரசுப் பணிகளை உருவாக்குவோம் என்று உறுதியளித்திருந்தது. ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என்று கணக்கிட்டால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்நேரம் சுமார் 27 முதல் 28 லட்சம் வேலைவாய்ப்புகளை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், எதார்த்தத்தில் அந்த எண்ணிக்கை எட்டப்படவில்லை என்பதே உண்மை. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
தமிழ்நாட்டின் மிக முக்கியப் பிரச்சனையாக இன்று உருவெடுத்திருப்பது பெண்கள் பாதுகாப்புதான். மது மற்றும் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுவதால் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் சமூகத்தில் ஊடுருவியதே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைகிறது.
முன்பு மறைமுகமாக இருந்த கஞ்சா விற்பனை, இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலும் மிகத் தாராளமாக நடைபெறுகிறது. டாஸ்மாக் கடைகளை விட அதிகமாக கஞ்சா விற்பனை மையங்கள் பெருகிவிட்டன. இதனால் மாணவர் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது
சமீபத்தில் ஒரு 16 வயது சிறுமி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, காவல்துறையிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளை கேடயமாகப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை நடக்கும் அளவுக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதுவே தமிழ்நாட்டின் இன்றைய மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாகும்.
கஞ்சா விற்பனை சுமார் 60,000 முதல் 70,000 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறும் மாபெரும் சந்தையாக மாறியுள்ளது. ஆனால், இதனை விற்பனை செய்யும் முக்கியப் புள்ளிகளையோ, பெரும் நெட்வொர்க்கையோ முதலமைச்சரோ அல்லது காவல்துறையோ இதுவரை கைது செய்யவில்லை. கண்துடைப்புக்காகச் சில கைது நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
தெருத்தெருவாக கஞ்சா
திமுகவின் கவுன்சிலர், எம்.எல்.ஏ அல்லது எம்.பி-க்குத் தெரியாமல் அந்தப் பகுதியில் ஒரு வீடு கட்டவோ, தொழில் செய்யவோ முடியாது. கமிஷன் வாங்குவதற்காக உடனே ஆஜராகும் இவர்களுக்கு, தங்கள் பகுதியில் நடக்கும் கஞ்சா விற்பனை பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தெரிந்தே அனுமதிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தெருத்தெருவாக கஞ்சா விற்கப்படுவது தெரிந்தும் காவல்துறையால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆளுங்கட்சியினர் காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுக்கிறார்களா அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களே இதற்கு உடந்தையாக இருக்கிறார்களா என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
பாட்டிலுக்கு 10 ரூபாய்
அங்கீகரிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளைப் போலவே, போலியான மதுபானக் கடைகள் மூலமாகவும் விற்பனை நடைபெறுவதாகத் தகவல்கள் வருகின்றன. செந்தில் பாலாஜி எப்படி பாட்டிலுக்கு 10 ரூபாய் எடுத்து முறைகேடு செய்தாரோ, அதே பாணியில் இப்போதும் முறைகேடுகள் நடந்து வருகின்றன. இது குறித்துப் பெரிய ஏஜென்சிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.
தமிழ்நாட்டில் நடக்கும் இந்த மெகா போதைப் பொருள் விற்பனை மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Bureau) உடனடியாக விசாரிக்க வேண்டும். மாநில காவல்துறையால் இந்த விஷயத்தில் நேர்மையாகச் செயல்பட முடியாத சூழல் நிலவுகிறது. ஒன்றிய அரசின் தலையீடு அவசியம்.
நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் (Live Telecast) ஒளிபரப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தது. ஆனால், இன்று ஆளுங்கட்சியான பிறகு, அவர்களே அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே இந்த இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அது நேரலையில் காட்டப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போதோ அல்லது கேள்வி கேட்கும்போதோ கேமராக்களை அவர்கள் பக்கம் திருப்பாமல் இருட்டடிப்பு செய்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என தெரிவித்தார்.
மக்களின் கஷ்டம் தெரியாது
முதலமைச்சருக்கோ அல்லது துணை முதலமைச்சருக்கோ சாதாரண மக்களின் கஷ்டம் தெரியாது. அவர்கள் நேரடியாகப் பதவிக்கு வந்தவர்கள். ஆனால், ஒரு வேலைக்காக அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கும் சாமானிய இளைஞனின் வலியும், வேதனையும் அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.
பிஜேபி எப்படி ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்படுகிறதோ, அதேபோலத் தமிழகத்தில் திமுகவும் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்க காங்கிரஸ் போராடுவது போல, தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம். மக்கள் மன்றத்தில் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் உள்ளவர்களை அரசு முடக்குகிறது என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதை நேரலையில் காட்டுகிறார்கள், அங்கு ஜனநாயகம் ஓரளவுக்குப் பேணப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை இருட்டடிப்பு செய்து, சட்டமன்றத்தையே ஒரு தனிநபர் துதிபாடும் இடமாக மாற்றிவிட்டார்கள். இது ஜனநாயகத்தின் குரவளையை நெரிக்கும் செயலாகும், இதனை மக்கள் மன்றம் மன்னிக்காது என தெரிவித்தார்.























