மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17-ம் தேதி காலை தனது அரசு வாகனம் பறிக்கப்பட்டதாகவும், தனக்கு உயர் அதிகாரிகள் அழுத்தம் தருவதாகவும், தன்னை வளைந்து நெளிந்து செல்ல வேண்டும் என உயர் அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் என பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மறுப்பு தெரிவித்த எஸ்.பி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு பணிக்கு வாகனம் தேவைப்பட்டதால் அவருக்கு மாற்று வாகனம் கொடுத்து அந்த வாகனத்தை பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தினோம். நேற்றைய தினமே அந்த வாகனமும் அவரிடம் வழங்கப்பட்டு விட்டது. உயர் அதிகாரிகள் யாரும் அவருக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை, நேர்மையாக பணியாற்றுபவர்களை காவல்துறையும் அரசும் மரியாதையுடன் நடத்துமே தவிர அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் டிஎஸ்பி சுந்தரேசன் அவர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் என கூறினார்.
டிஐஜி விசாரணை
அதேநேரம் மாவட்ட காவல்துறை சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனின் செயலுக்கு மறுப்பு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அனைத்து நிலை அதிகாரிகளிடமும் நேரில் விசாரணை மேற்கொண்டார். மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி இடம் விசாரித்த போது டிஎஸ்பியாக சுந்தரேசன் பதவி ஏற்றதிலிருந்து தன்னை மிரட்டி வந்ததாகவும், ஒருமுறை குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி கூறியதன் பேரில் தொலைபேசியில் டிஎஸ்பியை அழைத்தபோது அவர் அதனை ஏற்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் இதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் சக காவலர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சக காவலர்கள் குற்றச்சாட்டு
இதேபோல் சீர்காழி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயாவிடம் விசாரணை செய்த போது டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்ந்து தான் சொல்வதைதான் செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்து வந்ததாகவும், இல்லை என்றால் தன்னை பற்றி உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளித்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் விசாரணையின் போது டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஏசியும், பிரிண்டர் இரண்டையும் வாங்கி வைக்க சொல்லி சுந்தரேசன் மிரட்டியதாகவும், அதன் பேரில் அலுவலகத்திற்கு ஏசி வாங்கி தான் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்த டிஐஜி
மேலும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடமும் விசாரணை மேற்கொண்ட தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் அவர்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து கொண்டார். காவல்துறை வாகனம் பறிக்கப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்ததாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்கள் மட்டுமே செய்தியாளர் சந்திப்பு மற்றும் செய்தி குறிப்புகள் வெளியிட வேண்டும் என்ற விதியை மீறி தன்னிச்சையாக டி.எஸ்.பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்ததால் காவல்துறை விதிகளை மீறியதும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையிலும் காவல்துறையின் விதிகளை மீறி செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாகவும், டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க (தற்காலிக பணியிடை நீக்கம்) செய்ய பரிந்துரை செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் திருச்சி மத்திய மண்டல ஐஜிக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியாது.
உள்துறை செயலாளர் நடவடிக்கை
இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசனை அரசு பொது ஊழியர்களுக்கான விதிமுறைகளை மீறியதாக ஒழுங்கீன செயலில் ஈடுப்பட்டதாக கூறி உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மீண்டும் சட்ட விரோத மது விற்பனை
இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறையில் பதவி ஏற்றதில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தும் 1200 பேரை மீது வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் தொடர்பாக தீவீரமாக செயல்பட்டு வந்தார். இதனால் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் ஒரளவு கட்டுக்குள் இருந்துவந்தது. தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த நாளிலிருந்து மயிலாடுதுறை பகுதியில் பூட்டி கிடந்த சட்டவிரோதப்பார்களை மீண்டும் திறந்து விட்டனர். குறிப்பாக சித்தர் காடு பகுதியில் காவிரிக்கரை அருகில் செயல்படும் டாஸ்மார்க் கடையில் பொது வெளியில் அட்டைப் பெட்டியில் வைத்துக் கொண்டு டாஸ்மார்க் சரக்கு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டிஎஸ்பி சஸ்பெண்ட் ஆர்டர் கைக்கு வருவதற்கு முன்பே பார்களை திறந்து விட்டனர் என்றால் இன்னும் சில நாட்களில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். தற்பொழுது வெட்ட வெளியில் மதுபானம் விற்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிஎஸ்பிக்கு ஆதரவாக திரளும் பொதுமக்கள்
இந்த சூழலில் மயிலாடுதுறையில் நேர்மையாக பணியாற்றி, போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை கணிசமாக குறைந்த ஓர் நேர்மையான அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆதரவாக மயிலாடுதுறை மாவட்டம் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஒன்றினைந்து நீதிக்கான கூட்டமைப்பு என்ற பெயரில் வருகின்ற 23.07.2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு டிஎஸ்பி சுந்தரேசன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை செய்யவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.