நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28.07.2026 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு முகாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பொருட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் 28.07.2026 அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கூட்ட அரங்கில் இந்த உயர்மட்டக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

வருவாய் கோட்டாட்சியர் அளவிலான மாதாந்திர சிறப்பு முகாம்கள்

மாவட்ட அளவிலான முகாம்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே மனுக்களை அளித்து எளிதாகப் பயன்பெறும் வகையில், ஜீலை-2026 முதல் மாதாந்திர சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. வருவாய் கோட்டாட்சியர் (RDO) தலைமையிலான இக்கூட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.

நாகப்பட்டினம் வருவாய் கோட்டம்

நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டமானது, பிரதி மாதம் முதல் செவ்வாய் கிழமை அன்று நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

வேதாரண்யம் வருவாய் கோட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டமானது, பிரதி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

முக்கிய குறிப்பு: இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் நாட்கள் ஏதேனும் அரசு பொது விடுமுறை தினங்களாக இருந்தால், அதற்கு மாற்றாக முகாம் நடைபெறும் மாற்றுத் தேதி குறித்த விவரங்கள் முன்னதாகவே பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்கள் அறியும் வண்ணம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.

சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்களின் விவரங்கள்

இந்தச் சிறப்பு குறைதீர்வு முகாம்களில் கலந்துகொண்டு தங்களது தேவைகள், உபகரணங்கள் மற்றும் இதர அரசு நலத்திட்ட உதவிகளுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் மனுக்களுடன் பின்வரும் தேவையான ஆவணங்களின் நகல்களைத் தவறாமல் இணைத்துச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID Card)

 2. ஆதார் அட்டை நகல்

 3. குடும்ப அட்டை (Ration Card) நகல்

 4. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) நகல்

 5. முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை நகல்

 6. தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (இரண்டு)

மேற்கண்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, மூன்று சக்கர வண்டிகள், காதொலிக் கருவிகள், சுயதொழில் தொடங்க வங்கிக் கடனுதவிகள் மற்றும் இதர நல வாரிய உதவிகள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குரிய அரசு சலுகைகள் எவ்விதத் தொய்வுமின்றிச் சென்றடைவதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் வருவாய் கோட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்குரிய பகுதிகளில் நடைபெறும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்களது உரிய ஆவணங்களுடன் முகாம்களில் கலந்துகொண்டு, கோரிக்கை மனுக்களை வழங்கிப் பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் திரளாகக் கேட்டுக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இம்முகாமிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்து, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.