மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்கள் சுய வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கடனுதவிகள் வழங்கப்படுவதை எளிமையாக்கும் வகையிலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிசம்பர் 19, 2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிறப்பு 'லோன் மேளா' நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
கடன்கள் எதற்கு?
சிறுபான்மையின மக்களின் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளுக்காக இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.முக்கியமாகச் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள்:
* தனிநபர் கடன்
* சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன்
* விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான கடன்)
* கல்விக் கடன்
திட்டங்கள் 1 மற்றும் 2: வருமான உச்சவரம்பு
சிறுபான்மையின மக்களுக்கான இந்தக் கடன் திட்டங்கள் இரண்டு பிரிவுகளாக, அதாவது திட்டம் 1 மற்றும் திட்டம் 2 எனப் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. கடனின் அதிகபட்ச அளவு மற்றும் வட்டி விகிதங்கள் இந்தத் திட்டங்களின் கீழ் மாறுபடுகின்றன.
திட்டம் 1 : கிராமப்புறம்/நகர்ப்புறம் ரூ. 3,00,000/- வரை ஆண்டு வருமானம்
திட்டம் 2 : கிராமப்புறம்/நகர்ப்புறம் ரூ. 8,00,000/- வரை (திட்டம் 1-ன் கீழ் பயன்பெற முடியாத நபர்கள்) ஆண்டு வருமானம்
வட்டி விகிதங்கள் மற்றும் கடனின் உச்சவரம்பு
தனிநபர் கடன்: திட்டம் 1, பொது 6% வட்டி விகிதத்தில் ரூ. 20,00,000 கடன்
தனிநபர் கடன் : திட்டம் 2 , ஆண்களுக்கு 8% வட்டி விகிதம் பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் ரூ. 30,00,000 கடன்
கைவினைக் கலைஞர் கடன்: திட்டம் (விராசாத்) ஆண்களுக்கு 5% , பெண்கள் 4% வட்டி விகிதத்தில் ரூ. 10,00,000 கடன் உதவி
சுய உதவிக் குழு கடன் : திட்டம் 1 நபர் ஒருவருக்கு 7% வட்டி விகிதம் ரூ. 1,00,000
சுய உதவிக் குழு கடன் : திட்டம் 2 ஆண்கள் 10% வட்டி விகிதத்திலும்,பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் ரூ. 1,50,000 கடன்
கல்விக் கடன் உதவிகள்
சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்குக் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
* திட்டம் 1-ன் கீழ்: 3% வட்டி விகிதத்தில், அதிகபட்சமாக ரூ. 20,00,000/- வரை.
* திட்டம் 2-ன் கீழ்:* மாணவர்களுக்கு 8% வட்டி விகிதத்திலும்
* மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும்,
* அதிகபட்சமாக ரூ. 30,00,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
விராசாத் கடன் திட்டம்: கைவினைக் கலைஞர்களுக்குச் சிறப்புச் சலுகைபொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்கள், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'விராசாத்' (கைவினைக் கலைஞர் கடன் திட்டம்) மூலம் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி பெறலாம். இந்தக் கடன் மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் அல்லது இயந்திரங்கள் வாங்குவதற்கு வழங்கப்படுகிறது.
லோன் மேளாவில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்இந்தக் கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் சிறுபான்மையின மக்கள், 19.12.2025 அன்று நடைபெறவிருக்கும் லோன் மேளாவில் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.
பொதுக் கடன்களுக்கான ஆவணங்கள் (தனிநபர், சுய உதவிக் குழு, விராசாத்)
* சிறுபான்மையினர் மதச் சான்றிதழ்
* சாதிச் சான்றிதழ்
* வருமானச் சான்றிதழ்
* உணவு பங்கீட்டு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ்
* ஆதார் அட்டை
* திட்ட அறிக்கை
* வங்கிகள் கோரும் தேவையான பிற ஆவணங்கள்
கல்விக் கடனுக்கான ஆவணங்கள்
* சிறுபான்மையினர் மதச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் நகல்
* வருமானச் சான்றிதழ் நகல்
* இருப்பிடச் சான்றிதழ் நகல்
* குடும்ப அட்டை / வாழ்விடச் சான்று (Smart Card) நகல்
* ஆதார் நகல்
* பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்
* உண்மைச் சான்றிதழ் அசல் (Bonafide Certificate)
* கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது (அசல்)
* மதிப்பெண் சான்றிதழ் நகல்
* வங்கி கோரும் இதர ஆவணங்கள்
அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் இந்தச் சிறப்பான கடனுதவித் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.