மயிலாடுதுறை: பொதுமக்களின் நலனுக்காகத் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் தனக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கக் கோரி, தமிழக முதல்வர் விஜய்யின் புகைப்படம் அடங்கிய பதாகையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் மண்டியிட்டுச் சென்று மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பத்தாண்டு கால அர்ப்பணிப்புச் சேவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம் (47). இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றியத்தில் நிரந்தர தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். தனது அன்றாடப் பணியைத் தாண்டி, சமூக சேவையிலும் பொதுமக்களுக்கு உதவும் நற்பணிகளிலும் இவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். தமிழகம் சந்தித்த பல்வேறு இயற்கைப் பேரிடர் காலங்களில் முன்நின்று களப்பணியாற்றிய பெருமை சிவானந்தத்திற்கு உண்டு.

குறிப்பாக, சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் நாகப்பட்டினத்தை உலுக்கிய ‘கஜா’ புயல் ஆகியவற்றின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். மேலும், உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று தீவிரமாகப் பணியாற்றி மக்களின் பாராட்டைப் பெற்றார். இதுமட்டுமன்றி, அவசரக் காலங்களில் நோயாளிகளின் உயிரைக் காக்க இதுவரை 25 முறைக்கும் மேலாக ரத்ததானம் வழங்கித் தனது சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

Continues below advertisement

அரசு அதிகாரிகளின் பரிந்துரை

இவரது தன்னலமற்ற சமூகச் சேவையைப் பாராட்டி, அவருக்குத் தமிழக அரசின் ‘முதலமைச்சர் விருது’ வழங்க வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகளே முறைப்படி பரிந்துரை செய்துள்ளனர். குத்தாலம் ஒன்றிய அலுவலகம் மற்றும் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து, சிவானந்தத்தின் சிறப்பான சமூகப் பணிகளைக் குறிப்பிட்டு, அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கக் கோரும் பரிந்துரைக் கடிதங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடரும் அலட்சியமும் காத்திருப்பும்

அதிகாரிகளின் அதிகாரப்பூர்வப் பரிந்துரைக் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அதன்பேரில் எவ்விதத் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தனக்கு முதலமைச்சர் விருது கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவானந்தம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நாள்கள் பல கடந்தும் கோரிக்கை பரிசீலிக்கப்படாததால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

மண்டியிட்டுச் சென்று புதுமையான போராட்டம்

அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தனது கோரிக்கைக்கு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தியும் சிவானந்தம் இன்று ஒரு வித்தியாசமான போராட்டத்தைக் கையிலெடுத்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் புகைப்படம் தாங்கிய பதாகையையும், தன் கோரிக்கை மனுவையும் கைகளில் ஏந்தியபடி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து ஆட்சியர் அறை வரை மண்டியிட்டவாறே நகர்ந்து சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தூய்மைப் பணியாளர் ஒருவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளிக்க வந்த காட்சி அங்கிருந்த பொதுமக்களையும் அதிகாரிகளையும் பெருமளவில் நெகிழ வைத்ததுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியர் உறுதி

தகவலறிந்து வந்த அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் அழைத்துச் சென்றனர். சிவானந்தத்திடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், அவரது கோரிக்கைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், விருது பரிந்துரைத் தொடர்பான கோப்புகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆட்சியரின் இந்த உறுதியைத் தொடர்ந்து சிவானந்தம் அங்கிருந்து கலைந்து சென்றார்.