மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வெளிசந்தை முறையில் முகமை மூலம் நிரப்பப்படவுள்ள இக்காலிப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பணியிட விபரம் மற்றும் மாத ஊதியம்

தமிழ்நாடு அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான வங்கி கடன் உதவிகளை தடையின்றி ஒருங்கிணைக்கவும் இந்த கடன் மேலாண்மை முகமை செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட அளவில் தீவிரப்படுத்துவதற்காக மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Coordinator) பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபருக்கு பிரதி மாதம் ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

விண்ணப்பிப்பதற்கான கல்வி மற்றும் சேவைத் தகுதிகள்

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது மண்டல கிராமப்புற வங்கிகளில் (RRB) உயர் அலுவலராகப் பணிபுரிந்து முறைப்படி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். வங்கித்துறையில் கடனுதவி வழங்குதல், ஊரக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளித்தல் ஆகிய பணிகளில் நீண்ட அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

இருப்பினும், தன்விருப்ப ஓய்வு பெற்றவர்கள் (Voluntary Retirement) மற்றும் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

வயது வரம்பு மற்றும் பிற நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பைப் பொறுத்தவரை, ஓய்வுபெற்ற அலுவலர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வங்கி நிர்வாகம், கடன் மேலாண்மை மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த முழுமையான புரிதல் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட அளவில் பல்வேறு வங்கிக் கிளைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இலக்குகளை அடையும் திறன் கொண்ட ஆற்றல்மிகு ஓய்வுபெற்ற அதிகாரிகள் இதன் மூலம் பயனடையலாம்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் முழுமையான விவரங்கள் அடங்கிய சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகள், வங்கிப் பணி அனுபவச் சான்று மற்றும் ஓய்வு பெற்றதற்கான ஆவணங்களின் நகல்களுடன் தங்களது விண்ணப்பங்களை தயார் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 

"இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), 4-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், மயிலாடுதுறை - 609305" என்ற முகவரிக்கு நேரில் நேர்முகமாகவோ அல்லது பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 25.08.2026 அன்று மாலை 5.00 மணி ஆகும். குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். எனவே, தகுதியுடைய ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.