மயிலாடுதுறை: தமிழின் முதல் நாவலாசிரியரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட நினைவு அரங்கம் மற்றும் சிலை கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Continues below advertisement

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட காவேரி நகர் பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏக்கள் எஸ்.இராஜகுமார் (மயிலாடுதுறை), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி) ஆகியோர் உடனிருந்தனர்.

கட்டுமானப் பணிகள் தீவிரம்: அமைச்சர் விளக்கம்

ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது; "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படியும், துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, பணிகளின் கூடுதல் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன."

Continues below advertisement

இந்த அரங்கமானது சுமார் 9,500 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது.

 * அரங்கத்தைச் சுற்றி பாதுகாப்புச் சுற்றுச்சுவர் மற்றும் முறையான அணுகுசாலை.

 * அரங்கத்தின் உட்புறம் நவீன வசதிகளுடன் கூடிய ஒப்பனை அறைகள்.

 * முன்புற பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட பேவர் பிளாக் கற்கள் பதித்தல்.

 * தடையற்ற குடிநீர் வசதிக்காகப் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல்.

மேலும், மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் முன்சீப் வேதநாயகத்தின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் மற்றும் சிலை ஆகியவற்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் செயல்பாடு குறித்த விமர்சனம்

சட்டப்பேரவையின் முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது, தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததைக் கண்டித்து ஆளுநர் கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் காரசாரமாகப் பதிலளித்தார்.

"தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் மரபுப்படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், மத்திய அரசைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை," என்றார்.

மேலும், "வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குச் சிலை அமைத்துச் சிறப்புச் செய்தவர் நம் முதலமைச்சர். ஆனால், மத்திய அரசு அவருக்கு உரிய முறையில் சிலை அல்லது மணிமண்டபம் அமைக்கவில்லை" என்று சாடினார்.

பெயர் மாற்றக் கோரிக்கைகள் குறித்து

பெயர் பலகைகளில் சாதிப் பெயர்கள் நீக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஜி.டி. நாயுடு போன்ற பெயர்களில் அது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும், மயிலாடுதுறையில் 'சுவாமி நாகப்ப படையாட்சி' என்று பெயர் வைக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு செல்லப்படும்," என உறுதியளித்தார்.

ஆய்வில் பங்கேற்ற அதிகாரிகள்

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் சுகுமாரன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.