மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

Continues below advertisement

முதற்கட்ட பணிகள் தீவிரம் 

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான நிர்வாகப் பணிகளில் ஒன்றான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் முதற்கட்டமாக கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்ட பணியான "வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு" (Houselisting and Housing Census) கடந்த 01.08.2026 முதல் தொடங்கி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணியானது எதிர்வரும் 30.08.2026 அன்று நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணிகள் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Continues below advertisement

1,453 ஆசிரியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபாடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இக்கணக்கெடுப்புப் பணிகளை எவ்வித தொய்வுமின்றி, துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காகப் பெருமளவிலான களப் பணியாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பாளர்கள் (Enumerators) 1,453 பேர்,

மேற்பார்வையாளர்கள் (Supervisors) 250 பேர்

இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைவரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களே ஆவர். சமூக மாற்றத்திற்கும், மாணவர்களின் எதிர்காலத்திற்கும் அடித்தளமிடும் ஆசிரியர்கள், தற்போது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்குத் தேவையான இந்த முதன்மைத் தேசியப் பணியிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றி வருகின்றனர்.

துல்லியமான தகவல்களின் அவசியம்

இது குறித்து மேலும் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவிக்கையில், "ஆசிரியர்களாகிய கணக்கெடுப்பாளர்கள் தங்களின் வீடுகளுக்குத் தரவுகளைச் சேகரிக்க வரும்போது, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தின் நிலவரம் குறித்த சரியான மற்றும் துல்லியமான தகவல்களை எவ்வித தயக்கமுமின்றி வழங்கிட வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான தகவலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். குறிப்பாக,

கல்வி மற்றும் சுகாதாரக் கூட்டமைப்புகள், புதிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்தல். அடிப்படை வசதிகள், குடிநீர் இணைப்பு, வடிகால் வசதி, மின்சாரம் மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல். சமூகப் பாதுகாப்பு, ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதி மற்றும் புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்குதல். இவை அனைத்தும் மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு அரசால் திட்டமிடப்படுகின்றன."

30.08.2026-க்குள் பணியை நிறைவு செய்யக் கோரிக்கை

வீடுகள் கணக்கெடுப்புப் பணி வரும் 30.08.2026 ஆம் தேதியுடன் நிறைவடைவதால், எஞ்சியுள்ள நாட்களுக்குள் அனைத்துக் குடும்பங்களின் தரவுகளையும் முழுமையாகச் சேகரிக்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களை நாடி வரும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையுடனும், இன்முகத்துடனும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒருங்கிணைந்த செயல்பாடே வெற்றியின் ரகசியம்

இறுதியாக, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது செய்தியில்: "மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஏதோ ஒரு சாதாரண அரசுப் பணி அல்ல. இது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தேசியக் கடமை ஆகும். நமது மாவட்டத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினாலும், முழுமையான ஒத்துழைப்பினாலும் மட்டுமே இக்களப் பணியை 100% வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

"நமது சென்சஸ்... நமது வளர்ச்சி!"

மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும், அடுத்த தலைமுறையின் நலனுக்கும் அடித்தளமிடும் இத்தேசியப் பணியில் மயிலாடுதுறை மாவட்டப் பொதுமக்கள் அனைவரும் கை கோர்த்து, இக்கணக்கெடுப்புப் பணியை முழுமையாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.