மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின்கீழ் செயல்படவுள்ள ‘மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமைக்கு’ (District Livelihood Credit Management Agency) மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Co-ordinator) பணியிடம் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளுக்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான வங்கி நிதியுதவிகளை எளிதாகப் பெற்றுத் தரவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கும் மகளிர் திட்ட அலகிற்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்த ‘மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர்’ பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தை முறையில் நியமனம் மற்றும் மதிப்பூதியம்

இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிக அடிப்படையில் வெளிசந்தை (Outsourcing) முறை மூலம் தகுதியான ஒரு முகமையின் வாயிலாக நிரப்பப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் நபருக்குத் தகுதியின் அடிப்படையில், மாதாந்திர மதிப்பூதியமாக (Monthly Remuneration) ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடனுதவிகள் மற்றும் நிதி மேலாண்மையில் சிறந்த அனுபவம் உள்ள நபர்களைக் கொண்டு, சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Continues below advertisement

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்னென்ன?

இந்த மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Co-ordinator) தேர்வுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்வருமாறு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

பணி அனுபவம்: விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் (Nationalized Banks), வங்கிகளின் மண்டல அலுவலகங்கள் (Regional Offices) அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (Gramin Banks) உயர் பதவிகளில் பணிபுரிந்து, முறையாகப் பணிநிறைவு பெற்று ஓய்வு பெற்ற அதிகாரியாக (Retired Bank Officials) இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 60 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.

முக்கிய நிபந்தனை: தன் விருப்ப ஓய்வில் (VRS) சென்றவர்கள் அல்லது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் (Dismissed from service) இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அனுமதியில்லை எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

பணியின் முக்கியப் பொறுப்புகள் (Job Profile)

தேர்வு செய்யப்படும் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிக் கிளைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு (SHGs) வழங்கப்படும் கடன் இணைப்புகள் (Credit Linkage), சுழல் நிதி (Revolving Fund) மற்றும் பல்வேறு அரசு மானியக் கடன்கள் தொய்வின்றிச் சென்றடைவதை இவர் கண்காணிக்க வேண்டும். மேலும், வங்கிகளில் நிலுவையில் உள்ள மகளிர் திட்டக் கடன் விண்ணப்பங்களை விரைந்து முடிக்கத் தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு இவர் வழங்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் கடைசித் தேதி

மேற்கண்ட தகுதியும், வங்கிப் பணியில் நீண்ட அனுபவமும் கொண்ட விருப்பமுள்ள நபர்கள் தங்களது முழுமையான சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் பணி ஓய்வு பெற்றதற்கான சான்றிதழ் நகல்களுடன் தங்களது விண்ணப்பங்களைத் தயாரிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை:

"தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), 4-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், மயிலாடுதுறை -

என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது உரிய சான்றுகளுடன் பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 05:00 மணிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அழைப்பு

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மயிலாடுதுறை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு மிக அவசியமானது. எனவே, வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, அனுபவமிக்க அதிகாரிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தின் ஊரக வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு தகுதியான நபர்களை அன்போடு அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகித்தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.