மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து காவல் துறையினர் அதிரடி சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த தீவிர வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் மொத்தம் 91 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உரிய ஆவணங்கள் இல்லாத 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

Continues below advertisement

விபத்துகளைத் தடுக்க எஸ்பி அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தவும், விபத்தில்லா மாவட்டமாக மாற்றவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) G. ஸ்டாலின், அதிரடி உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்துதல், முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சமிக்கைகளை (Signals) அதிகப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் ஆகிய பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்லூரி அருகே நடந்த அதிரடி வேட்டை

குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் சாலைகளில் மிக அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனங்களை இயக்குவதாலும், போக்குவரத்து விதிகளைத் தொடர்ச்சியாக மீறுவதாலும் கடுமையான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுத்து, இளந்தலைமுறையினரின் உயிரைக் காக்கும் நோக்கில் மயிலாடுதுறை - மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏ.வி.சி (A.V.C) கல்லூரி அருகே காவல்துறையினர் சார்பில் அதிரடி மற்றும் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

Continues below advertisement

இந்த சோதனையின் போது, கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் வந்த மாணவர்கள் மற்றும் அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

குறிப்பாக தலைக்கவசம் (Helmets) அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லாமல் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டியவர்கள், அதிவேகமாக பைக்குகளை இயக்கியவர்கள் மற்றும் மொபைல் போனில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக வாகனம் ஓட்டியவர்கள் மீது காவல்துறையினர் தங்களது தனிக்கவனத்தைச் செலுத்தி, அவர்களை மடக்கிப் பிடித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்தனர்.

பதிவான வழக்குகளின் முழு விவரம்

இந்த அதிரடி வாகன தணிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களின் கீழ் மொத்தம் 91 வழக்குகள் பாய்ந்துள்ளன. அதன் விவரம் வருமாறு;

தலைக்கவசம் அணியாதது: பைக்குகளில் செல்லும் போது மிக அவசியமான ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பாக அதிகபட்சமாக 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செல்போன் பயன்பாடு: வாகனம் ஓட்டிக்கொண்டே அலைபேசியில் பேசியபடி கவனச்சிதறலுடன் சென்ற நபர்கள் மீது 08 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

ஓட்டுநர் உரிமம் இல்லாமை: உரிய லைசென்ஸ் இன்றி சட்டவிரோதமாக வாகனங்களை இயக்கியதாக 06 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டிரிபிள்ஸ் (Triples) பயணம்: இருசக்கர வாகனத்தில் விதியை மீறி மூன்று நபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தொடர்பாக 06 வழக்குகள் பாய்ந்துள்ளன.

முறையற்ற நம்பர் பிளேட்: மோட்டார் வாகன விதிகளின்படி முறையான பதிவெண் பலகை பொருத்தாமல் சுற்றிய வாகனங்கள் மீது 04 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சரக்கு வாகன விதிமீறல்: மனிதர்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்ட சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி ஆபத்தான முறையில் பயணம் செய்ய அனுமதித்தது தொடர்பாக 02 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பைக்குகள் பறிமுதல் & மாணவர்களுக்கு எச்சரிக்கை

மேலும், இந்த அதிரடி சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முறையிலும், வாகனத்திற்குரிய எவ்வித அசல் ஆவணங்களும் (RC Book, Insurance) இல்லாமலும் ஓட்டி வரப்பட்ட 05 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். அத்துடன், உரிய ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி சட்டத்தை மீறி இருசக்கர வாகனங்களை இயக்கி வந்த கல்லூரி மாணவர்கள் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு காவல் துறை வேண்டுகோள்

இனிவரும் நாட்களிலும் இந்த தீவிர வாகன தணிக்கை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடரும் என்று எச்சரித்துள்ள மாவட்ட காவல் துறை, பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது.

"பொதுமக்கள் அனைவரும் சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, தங்களுடைய மற்றும் பிறரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டாயம் போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, பெற்றோர் தங்களது பிள்ளைகள் உரிய ஓட்டுநர் உரிமம் (DL) பெறும் வரை, அவர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கவோ அல்லது இயக்குவதற்கோ எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. விபத்தில்லா பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்ய பொதுமக்கள் அனைவரும் மாவட்ட காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்". காவல்துறையினரின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கை மயிலாடுதுறை பகுதி கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.