மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைபொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம், போலி மதுபானம் ஒழிப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.


கள்ளச்சாராயம் தொடர்பாக ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தீடீர் கூட்டம்.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைபொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம், போலி மதுபானம் ஒழிப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைபொருள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் முற்றிலுமாக ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் கூட்டாக சேர்ந்து பெட்டி கடைகள், டாஸ்மாக் மதுபான கூடம் (பார்), தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.




ஒவ்வொரு பகுதிகளுக்கும் இவர்கள் தான் பொறுப்பு 


தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படும் இடம், எங்கிருந்து வாங்கப்படுகிறது, யாராருக்கு விற்பனை, எந்தெந்த ஊருக்கு விற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடன் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்திட வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனையினை ஆரம்ப நிலையிலேயே தடுத்து ஒழித்திடும் பொருட்டு, வட்டார அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனை தொடர்பான விவரங்களை அறிந்திடவும், மேல் நாடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்திட வேண்டும்.




கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு 


வருவாய் வட்டாட்சியர்கள், தங்கள் வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்து தெரிவித்திட அறிவுரை வழங்கிட வேண்டும். கிராம அளவில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை முனையங்கள் பற்றிய விவரங்களை, கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரணை செய்து அறிக்கை பெற்று, அதனடிப்படையில் நகராட்சி ஆணையர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.




விபரங்கள் சேமிப்பு 


பேரூராட்சிகளில், செயல் அலுவலர்கள் தங்கள் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை முனையங்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும. காவல்துறை உதவியுடன் அக்கடையினை சீல் செய்து சட்ட வழிமுறைகளின்படி அக்கடை உரிமையாளார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மதுவிலக்கு அமல் பிரிவு போலி மதுபானம் , கள்ளச்சாரயம் , வெளிமாநில மதுபானம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடந்து நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கூட்டத்தில் அறிவுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா, கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.