மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி அழுகிய சம்பா நெற்பயிர்களை, இதுவரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடாததைக் கண்டித்து, விவசாயிகள் இன்று நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, மழையில் பாதிக்கப்பட்ட இளம் நாற்றுகளைக் கையில் ஏந்தி வந்து, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் முறையிட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement


கனமழையால் மூழ்கிய இளம் சம்பா பயிர்கள்


மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 67,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், சுமார் 45,000 ஹெக்டேர் பரப்பளவில் நடவுப் பணிகள் நிறைவடைந்து, இளம் சம்பா பயிர்கள் வளர்ந்து வந்தன. இந்நிலையில், தீபாவளியை ஒட்டி கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.


ஏக்கருக்கு சுமார் ரூ. 25,000 வரை செலவு செய்த விவசாயிகள், இதனால் பெரும் பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிய தாமதமானதால், நீரில் மூழ்கிய இளம் பயிர்கள் வேருடன் அழுகி, முழுவதுமாகச் சேதமடைந்தன. பயிர் சேதத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலையும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.


அழுகிய பயிரை ஏந்தி ஆட்சியரிடம் மனு


இந்நிலையில், பாதிக்கப்பட்ட தங்கள் வயல்வெளிகளை இதுவரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என யாரும் நேரில் வந்து பார்வையிடவில்லை எனக் குற்றம்சாட்டி, இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும் அவர்கள், கனமழையால் அழுகிய இளம் நெல் நாற்றுகளைக் கையில் ஏந்தியபடி வந்து, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் மனு அளித்து தங்கள் துயரத்தை முறையிட்டனர்.


அதிகாரிகள் – விவசாயிகள் இடையே வாக்குவாதம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, வேளாண் இணை இயக்குநர் சேகர், "பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) மற்றும் வேளாண் உதவியாளர்களிடம் மனு அளித்தால், அவர்கள் உடனடியாக நேரில் வந்து பயிர்களைப் புகைப்படம் எடுத்து, சேதம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவார்கள்" என்று தெரிவித்தார்.


உடனடியாக இதற்குப் பதிலளித்த விவசாயிகள், ஆவேசத்துடன் தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். "பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்க எங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வரவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால், சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை" என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், கூட்டத்தில் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.


விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் எச்சரிக்கை


தொடர்ந்து, மழையினால் பாதிக்கப்பட்ட இளம் சம்பா நெற்பயிர்களைக் கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 40% அளவிற்கு இளம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை சார்பிலும் இதுவரை பாதிக்கப்பட்ட பயிர்களை யாரும் கணக்கீடு செய்யவில்லை என்றும், மக்கள் பிரதிநிதிகள் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.


விவசாயிகள் தங்கள் கோபத்தை மேலும் வெளிப்படுத்தும் விதமாக, கடந்த காலங்களில் வழங்க வேண்டிய நிவாரணம் குறித்தும் கேள்வி எழுப்பினர். "கடந்த 2024-25 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த பருவம் தப்பிய மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ. 63 கோடி நிவாரணம் வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை அந்தப் பணத்தைக்கூட அரசு விடுவிக்கவில்லை. தற்போதைய சேதத்திற்கும் முறையாக நிவாரணம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் பார்வையிட்டு, சரியான முறையில் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


வெளிநடப்பால் பரபரப்பு


மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு அதிகாரிகள் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, தங்களுடைய கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியான பதிலும் கிடைக்காததால், விவசாயிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


விவசாயிகளின் இந்த வெளிநடப்பு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தின் தீவிரத்தையும், விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் இந்தச்சம்பவம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.