தாட்கோ வழங்கும் ஒப்பனை & அழகுக்கலை பயிற்சி.. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு - முழு விவரம் !
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வுசெய்து நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ18,000 முதல் ரூ25,000 வரை வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training Courses) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரையும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ,3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் ஆகும். மேலும், இப்பயிற்சி இராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இங்கு தங்கும் வசதிகள், உணவுகள் உட்பட செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18,000- முதல் ரூ.25,000- வரை வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபர்கள் தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.























