பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமைச் சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதில், இலங்கை இல்லை. இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமாக சாத்திய கூறுகள் உள்ளது என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.

 

இந்திய குடியுரிமை வழங்க வேண்டி நான் அனுப்பிய மனுவை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்சியை சேர்ந்த அபிராமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரரின் பெற்றோர் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியா வந்த பின்பு 1993ல் மனுதாரர் பிறந்துள்ளார். தற்போது மனுதாரருக்கு 29 வயதாகிறது. மனுதாரருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் குடியுரிமை கேட்டு மனு செய்துள்ளார்.

 

மனுதாரரின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். ஆனால் மனுதாரர் இந்தியாவில் பிறந்துள்ளார். அவர் இலங்கை குடிமகளாகவும் இல்லை மனுதாரரின் கோரிக்கையை ஏற்காவிட்டால் அது சரியானதாக இருக்காது.

 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமைச் சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதில், இலங்கை இல்லை. இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமாக சாத்திய கூறுகள் உள்ளது. எனவே, மனுதாரர் குடியுரிமை வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு வெளிநாட்டவர் துறை செயலாளருக்கு அனுப்பவும்  அதனை தமிழ்நாடு வெளிநாட்டவர் துறை செயலாளர் மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். மத்திய உள்துறை செயலாளர் மனுதாரரின் மனு குறித்து 16 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கினை முடித்து வைத்தார்.

 



மற்றொரு வழக்கு















 

முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று ராமேஸ்வரம் மேலவாசல் பகுதியிலுள்ள மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு 27.10.2022 அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜையை கொண்டாடும் விதமாக ராமேஸ்வரம்  பகுதியுள்ள பெண்களின் சார்பாக முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று ராமேஸ்வரம் மேலவாசல் பகுதியிலுள்ள மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளோம்.

 

இதற்காக 10.10.2022 அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தும் இதுகுறித்து எவ்வித பதிலும் வழங்கவில்லை. எனவே, முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று ராமேஸ்வரம் மேலவாசல் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கியும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி சக்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது‌. அரசு தரப்பில், ராமேஸ்வரம் பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.