மேலும் அறிய
நகை திருட்டு புகாரில், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பா..?
”இந்த பிரச்னையில் என்னை கூட அடித்து விசாரணை செய்தனர். என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் நீதி கிடைக்க வேண்டும். - என கேட்டுக் கொண்டனர்.

திருப்புவனம் காவல்நிலையம்
Source : whats app
இறந்த அஜித்குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சூழலில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோயிலில் காவலாளியாக பணி செய்த இளைஞர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அருகே உள்ளது மடப்புரம். இங்கு பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில்
இங்கு தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகனான அஜித்குமார் (27) தற்காலிக முறையில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் மதுரை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி (75) தனது மகள் நிகிதாவுடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27) சக்கர நாற்காலி எடுத்து வந்து கொடுத்தார். அப்போது காரை ‘பார்க்கிங்’ செய்யுமாறு நிகிதா தெரிவித்தார்.
இளைஞரிடம் போலீஸ் விசாரணை
இதையடுத்து காரை அஜித்குமார் ‘பார்க்கிங்’ செய்துள்ளார். வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறியபோது, அங்கு பையில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த சுமார் 10 பவுன் நகையை காணவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாரிடம் நிகிதா புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில், அஜித்குமாரிடம் காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த அவரை தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் மற்றும் திருப்புவனம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே உறவினர்கள் காவல்நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை எஸ்.பி விசாரணை
இது குறித்து உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி கூறுகையில்...," கோயிலில் எனது அண்ணன் வேலையின் போது காரில் வந்த குடும்பத்திற்கு உதவியுள்ளான். இந்நிலையில் நகை காணவில்லை எனக் கூறி எனது அண்ணன் உட்பட 5 பேரை அடித்து விசாரணை செய்தனர். இந்த சூழலில் என் அண்ணன் உடலில் அடி தாங்கமுடியாமல் சிகிச்சையில் இருந்த போது, உயிரை விட்டுவிட்டான். இந்த பிரச்னையில் என்னை கூட அடித்து விசாரணை செய்தனர். என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை. போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் நீதி கிடைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். இந்த சூழலில் இறந்த அஜித்குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சூழலில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















