மேலும் அறிய
சிவகங்கை தொல்லியல்: 2000 ஆண்டு கல்வெட்டுகள், களப்பிரர் கால ரகசியம்.. மாணவர்கள் பங்களிப்பு அவசியம்!
குடைவரைக் கோயில்களும், முற்காலப் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்களும் மிகத் தொன்மை என்பதை சாந்தலிங்கம் அவர்கள் விளக்கிக் கூறினார்.

தொல்லியல் நிகழ்ச்சி
Source : whatsapp
கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சீன ரோமானிய பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், இரும்பு தாதுக்கள், கசடுகள் போன்றவற்றை காட்டி அவற்றை கண்டறியும் விதம் பற்றிக்கூறினார்.
சிவகங்கை மாவட்டத் தொல்லியல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தொல்லியல் மரபு மன்றத்தின் சார்பாக "சிவகங்கை மாவட்டத் தொல்லியல்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தலைமை வகித்து கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம் வரவேற்புரை ஆற்றினார். வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழகத் தொல்லியல் துறை மேனாள் உதவி இயக்குநர் முனைவர் சாந்தலிங்கம் "சிவகங்கை மாவட்டத் தொல்லியல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது களப்பிரர் கால கல்வெட்டு
அவர் கூறுகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டுகள் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் காணப்படுகின்றன. இதன்மூலம் இம்மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும், இங்கு காணப்படும் குடைவரைக் கோயில்களும், முற்காலப் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்களும் மிகத் தொன்மையானவை என்றும், அதுபோல தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது களப்பிரர் கால பூலாங்குறிச்சிக் கல்வெட்டென்றும் எடுத்துரைத்தார். அதன்பின் "தொல்லியல் தேடல்களில் கல்லூரி மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றச் செயலாளர் ராஜகுரு கலந்து கொண்டு உரையாற்றினார்.
தொல்லியல் சார்ந்தவற்றை தேடி ஆவணப்படுத்த வேண்டும்
அவர் கூறுகையில், தொல்லியல் மரபு மன்றத்தின் மூலம் தொல்லியல் கற்றுக் கொண்ட மாணவர்கள் தங்கள் ஊர் பகுதிகளில் உள்ள தொல்லியல் சார்ந்தவற்றை தேடி ஆவணப்படுத்த வேண்டும் என்றும் தொல்லியல் தேடலுக்கு ஆதாரமான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சீன ரோமானிய பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், இரும்பு தாதுக்கள், கசடுகள் போன்றவற்றை காட்டி அவற்றை கண்டறியும் விதம் பற்றிக்கூறினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில் இடம்பெற்ற தொல்லியல் பொருட்களின் கண்காட்சியை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். வரலாற்றுத் துறை கெளரவ விரிவுரையாளர் முனைவர் தங்கராஜ் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்களும், ஆசிரியரல்லாப் பணியாளர்களும் மற்றும் மாணவ மாணவியரும், கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























