திண்டுக்கல், பேகம்பூர்  தனியார் மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார்.


பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கட்சிகளை பலப்படுத்துவதற்கு, நிர்வாகிகளுக்கு என்ன என்ன பிரச்சனை உள்ளது. இவை அனைத்தையும் கலந்து உரையாடி தமிழகத்திற்கு  தலைவர் ராகுல் காந்தியை அழைத்து வந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த உள்ளோம்.




* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு புலன் விசாரணை நடைபெறும் நிலையில் அதை பற்றி விவாதிப்பது சரியாக இருக்காது. 11 நபர்களை கைது செய்துள்ளனர். உண்மையான குற்றவாளிகளை வெளி கொண்டுவர வேண்டும். அதன் பின்னர் யார் உள்ளார் என்பதை அறிய வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கை. புலன் விசாரணைக்கு பின் காங்கிரஸ் சார்பாக கருத்து தெரிவிப்போம். யார் யார் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக தெரியவரும்


* காங்கிரஸ் இயக்கத்தில் மகாத்மா காந்தி படுகொலை முதல் நாங்கள் யாரையும் தனிப்பட்ட தாக்குதலோ குடும்பத்தின் மீது தாக்குதலோ செய்யவில்லை. கோட்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்சேவுக்கு ஆதரவு அளிப்பவர்களை கண்டித்து உள்ளோம். கோட்சே மனைவியை பற்றியோ, அவரது தாயை பற்றியோ விமர்சிப்பது இல்லை. தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சி தலைவர் பெண்ணென்று பாராமல் ஜெயலலிதா குறித்து விமர்சிக்கின்றார். இறந்து போனவர்களை பற்றி விமர்சிக்கிறார். தலைவர்களின் குடும்பத்தை விமர்சிக்கின்றார். இப்போது நீதியரசர் சந்துருவை விமர்சிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.


எந்த அரசியல் கட்சித் தலைவரும் இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்யவில்லை. அரசியல் என்பது இருக்கும். அதிகாரம் என்பது இருக்கும். தரத்தை விட்டு கீழே இறங்கி யாரும் விமர்சனம் செய்யவில்லை. இதனை தமிழ்நாடு மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். யார் யார் எல்லாம் கீழ்த்தரமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தோம்.


தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கவில்லை. தனிப்பட்ட முறையில் யாரையும் பழி வாங்கவில்லை. தற்போது மிரட்டல், உருட்டல் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. பயப்படுவார்கள் எங்களைப் போன்றவர்கள் காங்கிரஸ் இயக்கத் தோழர்கள் யாரும் அஞ்சப் போவதுமில்லை இதைப் பற்றி கவலைப்பட போவதுமில்லை , உண்மை நேர்மை என்றும் வெற்றி பெறும்.


* உச்ச நீதிமன்ற தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு காவேரி ஒழுங்காற்று குழு தீர்ப்பு ஆகியவற்றை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிமையை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்க கூடாது. கர்நாடகா அரசுக்கு எதிராக போராட்ட தயாராக உள்ளோம். காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் போது வலியுறுத்த முடியும் இதுவரை 38 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.


இதற்குப் பின்பு காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு யாரும் மரியாதை, பரிவு, சிபாரிசு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு எழுத்துப்பூர்வமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் கொடுத்துள்ளது.


தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அதற்கு மத்திய அரசு தலையிட வேண்டும். மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.


* கர்நாடகா அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நீர் மேலாண்மை அமைச்சகத்தை கொடுக்கின்றனர். இது எந்த வகையில் நியாயமாக இருக்கும். இதற்குப் பின்பு பாஜக சித்து விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.


* மின் கட்டணம் உயர்வுக்கு உதய மின் கட்டணம் திட்டம் தான் பிரச்சனை. மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.


* சசிகலா குறித்த கேள்விக்கு. பிற கட்சிகளைப் போல அடுத்த கட்சி பிரச்சினையில் காங்கிரஸ் தலையிடுவதில்லை.


* சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு காங்கிரஸ் வாக்குறுதியில் இருந்தது. இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் சமூக நீதி என்பதற்காக கட்சி உள்ளது. அது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. அவர்கள் தான் பாஜகவிடம் கேட்க வேண்டும்.




* எமர்ஜென்சியில் அதிகாரிகள் மீது சில இடங்களில் தவறு உள்ளது என அப்போதைய இந்திரா காந்தி ஒப்புக் கொண்டுள்ளார். தவறை ஒப்புக் கொள்பவர்கள் தான் உண்மையான தலைவர்கள். தவறு நடந்திருந்தால் மன்னிப்பு கூறுகிறேன் என தெரிவித்திருந்தார் இதுதான் தலைமையின் பண்பு.


தற்போது இந்தியாவில் 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெற்று வருகிறது. இதைப் பற்றி பேசினால் செய்தியாளர்கள், அரசியல்வாதிகள் மீது வழக்கு போடுகின்றனர். முதலமைச்சர்களையே சிறைப்படுத்துகிறார்கள். ஐ.நா சபையே கண்டிக்கிறது.


* நீட் தேர்வை கொண்டு வந்தது பிஜேபி தான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய மருத்துவ கழகம் தேர்வு மூலம் மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பரிந்துரை மட்டுமே நீதிமன்றத்தில் செய்யப்பட்டது . அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின் மோடி அரசே நீட்டை கொண்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ஒருபோதும் நீட் தேர்வு வரவில்லை. 


* முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதும் தமிழ்நாட்டிற்குள் நீட் வரவில்லை. ஒரே மாதிரியான கல்வி மாநிலங்களில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன், சமச்சீர் கல்வி ஒன்றிணைத்த பின்பு தான் நீட் தேர்வு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார்.


தமிழக மாணவர்களுக்கு எதிரான தேர்வு தான் நீட். சேலஞ்ச் பண்ணி சொல்கிறேன் நீட்டைக் கொண்டு வந்தது மோடி அரசுதான்" என தெரிவித்தார்.