கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். மண்டல பூஜை நிறைவடைந்த நிலையில் தற்போது மகர விளக்கு பூஜை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வருடம் தோறும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி மாரிச்சாமி (வயது55) தலைமையில் ராம்கி (35) மற்றும் 7 பேருடன் ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள கோட்டூர்-சீலையம்பட்டி சத்தியா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்று விட மாரிச்சாமி, ராம்கி மட்டும் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் மீது அந்த வேன் பயங்கரமாக மோதியது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது சபரிமலைக்கு சென்ற வேன் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.