முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை கொண்டுவர சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்துவருகிறார். அண்மையில் ஜெர்மனி , இங்கிலாந்து நாட்டிற்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் மொத்தம், 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாட்டில் 1,156 கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், ரிலையன்ஸ் நிறுவனம் 1,156 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை அமைக்க தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் மசாலா, சிற்றுண்டி பொருட்கள், பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆலையால் உள்ளூரைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் சென்னையோடு மட்டும் நின்று விடாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாகி வருகின்றன . பல்வேறு இந்திய நிறுவனங்களும் சரி சர்வதேச நிறுவனங்களும் சரி தங்களுடைய ஆலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. சென்னை கடந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ,நெல்லை ,திருச்சி ,மதுரை, சிவகங்கை , தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களிலும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய உற்பத்தி ஆலைகளை அமைக்க தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தமிழ்நாட்டில் தன்னுடைய உற்பத்தி ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடெக்ஸ் நிறுவனம் தன்னுடையை ஆலையை 1156 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடியில் அமைக்க இருக்கிறது. தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆலையை அமைக்க இருக்கிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் கையெழுத்தானது . ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை அல்லிகுளம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா புகைப்படத்தோடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் . அதில் 60 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது என கூறியுள்ளார்.