திண்டுக்கல் முதல் குமுளி வரை 138 கி.மீ நான்கு வழிச்சாலை திட்ட அறிக்கை தயார். அடுத்த கட்டம் என்ன?
திண்டுக்கல் டூ குமுளி தேசிய நெடுஞ்சாலை ரூ. 12 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 60 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
திண்டுக்கல் டூ குமுளி நான்கு வழிச்சாலை விரிவாக்க திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரான நிலையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் முழு ஒத்துழைப்பை எதிர்பார்த்து உள்ளது.
தமிழகம் , கேரளா இரு மாநில எல்லைகளை இணைக்கும் வகையில் திண்டுக்கல் டூ குமுளி இடையே 138 கி.மீ., வரை மாநில நெடுஞ்சாலையாக இருந்தது. அந்தந்த மாநில நெடுஞ்சாலைத் துறைகள் வாயிலாக அவரவர் எல்லை வரை இந்த சாலைகள் அரைகுறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. 2010ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக இரண்டு வழிச்சாலையாக இது தரம் உயர்த்தப்பட்டது. 10 அடி அகலத்தில் உள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் விபத்து அதிகரித்து வருகின்றன. சபரிமலை சீசன் ,கோடை விடுமுறை காலங்களில் இந்த ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோட்டில் திண்டுக்கல் - குமுளி வரை 138 கி.மீ.,க்கு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது.
ரூ. 12 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. அதன்படி 60 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ. 3,000 கோடிக்கு மேல் செலவிட மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் முழு ஒத்துழைப்பை எதிர்பார்த்தும் இது வரை வழங்கவில்லை. தற்போது திண்டுக்கல்லில் இருந்து குமுளி செல்வதற்கு குறைந்தபட்சம் இரண்டே முக்கால் மணி நேரம் தேவைப்படுகிறது. ரோடு விரிவாக்க பணிகள் முடிந்தால் ஒரு மணி நேரமாக பயண நேரம் குறையும். சபரிமலை சீசனில் பக்தர்கள் எளிதாக அங்கு சென்று வருவர். விரிவாக்க பணிக்கு இரு புறங்களிலும் தலா 25 அடிக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில் விவசாய நிலங்கள் அதிகளவில் வருகின்றன.
திண்டுக்கல் முதல் குமுளி இடையிலான இரண்டு வழிச்சாலை திண்டுக்கல்லில் துவங்கி வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், குமுளி வரை உள்ளது. நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டால் குமுளியில் இருந்து வண்டிப் பெரியாறு, கோட்டயம், கொல்லம் வரை போக்குவரத்து எளிதாகும். திண்டுக்கல் - குமுளி ரோடு நான்கு வழியாக விரிவாக்கம் செய்வதால் இரு மாநில போக்குவரத்து மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Before You Go
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
ட்ரெண்டிங் செய்திகள்





















