அனுமதிக்கப்பட்ட பாதையை புறக்கணித்து கிராவல் லாரிகள் இயக்கம்; தூசி மாசு, விபத்து அபாயம் அதிகரிப்பதாக பொதுமக்கள் புகார்.

Continues below advertisement

கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சூடியூர் பகுதியில் கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுள்ளவர்கள், அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடத்தை பயன்படுத்தாமல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கோச்சடை கிராமம் அருகே உள்ள அய்யனார்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக லாரிகளை இயக்கி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வழித்தடத்தில் தினமும் 30 முதல் 50 கிராவல் லாரிகள் வரை சென்று வருவதால், அப்பகுதியில் கடும் தூசி மாசு ஏற்பட்டு வருகிறது. மானாமதுரை – பரமக்குடி – இளையான்குடி இணைப்புச் சாலையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

கிராவல் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை 

மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து கிராவல் மற்றும் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறி விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தூசி மற்றும் கற்கள் காரணமாக விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் மாவட்ட எல்லை தொடர்புடையது என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும், சிவகங்கை மாவட்ட வழித்தடத்தில் கிராவல் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும்

இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த   பொதுமக்கள் இன்று அந்த வழியாக வந்த சில கிராவல் லாரிகளை நிறுத்தினர் இதனால் பரபரப்பு நிலவு எது அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே லாரிகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.“அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பை உறுதி செய்து, விபத்து அபாயத்தை குறைக்கும் வகையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்தினர்.