அதிகாரிகள் பணி செய்ய தவறினால், களத்திற்கு வந்து ஆய்வு செய்ய நேரிடும்: கோவில் நில ஆக்கிரமிப்பில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்ற முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறும் அதிகாரிகள் மீதும் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரித்துள்ளது.

Continues below advertisement

கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர்  நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''கரூர் வெண்ணெய்மலை பாலசுபரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடம் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.

Continues below advertisement

இதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிமன்றம் உத்தரவுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது “கோவில் சொத்துகளை அபகரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஏன் தயக்கம் காட்டுகின்றனர்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும்,  நீதிமன்றம் ஏதோ உத்தரவுகளை பிறப்பிக்கிறது என அதிகாரிகள் நினைக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுகளை அவர்கள் பின்பற்றவில்லை என்பதில் அதிருப்தி உண்டு, எனக் கடும் விமர்சனத்தையும் தெரிவித்தனர். தொடர்ந்து, கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்ற முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறும் அதிகாரிகள் மீதும் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், “கோவில் சொத்துகளை உடனடியாக மீட்க வேண்டும். கரூர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரிகள் பணி செய்ய தவறினால், களத்திற்கு வந்து ஆய்வு செய்ய நேரிடும்,” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.