நாகர்கோவில் : எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு.. என்ன நடந்தது?

அரசுத்தரப்பில், 2.4 ஏக்கர் நிலம் உள்ளது எனவே குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு போதுமான இடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Continues below advertisement
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில்  அறங்காவலர் நியமனத்திற்கு  தொடர்பான அறிவிப்பாணைக்கு  தடை  கோரிய வழக்கு.

அதே கோரிக்கையுடன் உள்ள மற்ற வழக்குகளோடு விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

Continues below advertisement

திருநெல்வேலியை சேர்ந்த பெருமாள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் கடந்த 9.12.21அன்று வெளியிடப்பட்டது.இந்த அறிவிப்பில்  இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தின் மூலம்  விண்ணப்பங்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விண்ணப்பத்தில் அறங்காவலர்கள் நியமனத்திற்கு  விண்ணப்பிப்பதற்கான தகுதி, ஒவ்வொரு கோவிலிலும் எத்தனை அறங்காவலர்கள் பணியிடங்கள் உள்ளன?எவ்வாறு  தேர்வு செய்யப்பட உள்ளனர்? போன்ற தேவையான தகவல்கள் எதுவும் இல்லை. பொதுவாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளனர்.  இந்த முறையில் அறங்காவலர் குழு தேர்வு நடந்தால்,   இலகுவாக விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வெளிப்படைத்தன்மையுடன் நியமனம் நடைபெற வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கோவில்களில் நிர்வாகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் நிர்வாகத்தின் தலைமையில் இருப்பவர்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். 

இதுபோல் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை . எனவே இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு 09.12.21 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பாணைக்கு  இடைக்காலத் தடை விதிப்பதோடு, அறிவிப்பாணையை ரத்து செய்தும், போதிய விவரங்களுடன் புதிதாக. அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய்,  கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அரசுத்தரப்பில்,  இது போன்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும்,அதோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.அதையேற்ற நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கோடு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.


நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை கோரிய வழக்கு.
 
பள்ளியில் 2.4 ஏக்கர் நிலம் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
 
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரைச்சேர்ந்த வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 
 
அதில், "நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பெண்கள் உயர்நிலைப் பள்ளியானது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தொடங்கப்பட்ட பழமையான பள்ளி. கல்வி மற்றும் விளையாட்டில் இந்த பள்ளி சிறந்து விளங்குவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் இங்கு வந்து படிக்கின்றனர்.நகரின் மையப்பகுதியில் 4.2 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்திருந்தது. இங்கு பெரிய மைதானம் இருந்தது. இந்தநிலையில் அந்த மைதானத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,  மாவட்ட கல்வி அலுவலகம், தண்ணீர் தொட்டி போன்றவை கட்டப்பட்டன.இதனால், தற்போது இந்த பள்ளி வெறும் 50 சென்ட் நிலத்தில் தான் இயங்கி வருகிறது. பள்ளியின் இடம் சுருங்கியதால் இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
 
இதுமட்டுமல்லாமல் இந்த பள்ளி மைதானத்தில் அரசு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் ஆகியவற்றை கட்டுவதற்கான முயற்சிகள் தற்போது நடக்கின்றன. அந்த கட்டிடங்கள்  கட்டப்பட்டால் பள்ளியில் படிப்பவர்களின் கல்வி மற்றும் உடற்கல்வி மிகவும் பாதிக்கப்படும். இது அடிப்படை உரிமையை பறிப்பதாக அமையும்.எனவே நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில், 2.4 ஏக்கர் நிலம் உள்ளது எனவே குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு போதுமான இடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Continues below advertisement
Sponsored Links by Taboola