மதுரையில் நாளை நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம், திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்து மேடை அமைக்கப்பட்டுள்ளது.
 
முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடு
 
Muruga Bakthar Manadu - மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாட்டுற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை அருங்காட்சியகத்தில் நாள்தோறும் தமிழக முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தொடர்ந்து நான்கு நாட்களாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
திருப்பரங்குன்ற முருகன் கோயில் மலை பின்னணியில் இருப்பது போன்ற மேடை
 
இந்த நிலையில் நாளை மாலை நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேடையில் பின்புறம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்ற முருகன் கோயில் மலை பின்னணியில் இருப்பது போன்ற மேடை அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
முருக பக்தர் மாநாட்டில் ஏற்பாடுகள் தீவிரம்
 
மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளது. மாநாட்டிற்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களிலும் தற்காலிக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
காவல்துறையினர் கண்காணித்து பாதுகாப்பு பணிகள் 
 
நாளை நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட வரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக மாநாட்டு பகுதி முழுவதிலும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் மாநாட்டிற்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில் மாநாட்டு பகுதி முழுவதையும் காவல்துறையினர் கண்காணித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மாநாட்டிற்கு வருகை அதிகரிப்பு
 
மாட்டுத்தாவணி பகுதி முதல் பாண்டிக் கோயில் சாலை தொடர்ந்து மாநாட்டு திடல்வரை இந்து முன்னணியின் காவிக் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் விமானநிலையம் பகுதியில் இருந்து வரும் நபர்கள் பார்வையிடும் வகையில் காவிக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக ஏற்பாடாகிவரும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஏராளமான நபர்கள் தற்போது முதல் வரத்தொடங்கிவிட்டனர். மாநாடு நடைபெறும் பகுதியில் கூட்ட நெறிசல் அதிகரித்து வருகிறது.