தேயிலைத் தோட்டத்தில் ஜீப் கவிழ்ந்து சோகம்! சென்னையைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த துயரம்
எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த தேயிலை தோட்டத்தில் சுமார் 50 அடி பள்ளத்தில் ஜீப் விழுந்தது.

கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலங்களில், மூணாறு ஒவ்வொரு பார்வையாளர்களின் பயணத் திட்டத்திலும் ஒரு சிறப்புக் குறிப்பைக் காண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைகள் மிகவும் தேவையான சுத்தமான காற்றை வழங்குகின்றன. மூணாறில் ஒரு நாளில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் உறைவிடமாக இருந்த மூணாறு, இன்று நகரின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது.

பசுமையான தேயிலை தோட்டங்களாக இருந்தாலும் சரி, அருவிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு தாவரவியல் பூங்காக்களில் உள்ள மலர்களின் தெளிவான வண்ணங்களாக இருந்தாலும் சரி, இயற்கை அனுபவங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது, இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மூணாறுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று முன்தினம் மூணாறுக்கு ஒரு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் மூணாறை அடுத்த போதமேடு என்ற பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் மூணாறில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் செல்வதற்கு ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்,
ஜீப்பை மூணாறு அடுத்துள்ள பள்ளிவாசல் ஆற்றுக்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 40) என்பவர் ஓட்டியுள்ளார். ஜீப்பில் சென்னையைச் சேர்ந்த பயணிகள் 10 பேரும் ஏறினர். விடுதியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு டிரைவர் அஸ்வின் ஜீப்பை பின் நோக்கி நகர்த்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த தேயிலை தோட்டத்தில் சுமார் 50 அடி பள்ளத்தில் ஜீப் விழுந்தது. ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர்.
இந்த விபத்தில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (51) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் அஸ்வின், ஜீப்பில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மூணாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மூணாறு போலீசார் அங்கு விரைந்து வந்து பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடிமாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















