முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் குறித்து மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினா்  ஆய்வு செய்து வருகின்றனர். 


தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின்போது ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து பராமரிக்க, மூவா் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்ப்பதற்கு உத்தரவு பிறப்பித்து தற்போது இந்த குழுவில் ஐவர் உள்ளனர். இந்த மத்திய குழுவுக்கு உதவியாக, 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.




கடந்த பிப்ரவரி மாதம்  மத்திய துணை கண்காணிப்பு குழு அணை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மத்திய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மத்திய குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. இந்நிலையில் தற்போது கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது அணையின் நீர்மட்டம் 127.05 அடியாக உள்ள உள்ள நிலையிலும் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நேர நிலவரப்படி 3960 கன அடியாகவும் உள்ளது.




பருவமழை பெய்து வருவதன் காரணமாகவும், அணைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் குறித்தும், இன்று மத்திய நீர்வள  துணைக் கண்காணிப்புக் குழு தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சதீஷ்குமாா், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்பு கோட்டச் செயற்பொறியாளா் சாம் இர்வின், உதவிச் செயற்பொறியாளா் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை அணில் குமார் நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் உதவிப் பொறியாளா் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர்  அணைப் பகுதியில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.




இதற்காக  கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடி படகுத்துறையில் இருந்து தமிழக, கேரள அதிகாரிகள் படகின் மூலமாக அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இக்குழுவினர் பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீா்வரத்து, நீா் வெளியேற்றம் மதகுப் பகுதியில் நீர்க்கசிவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். அதனைத் தொடா்ந்து மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில், துணைக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில், அணைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு சம்பந்தமான அறிக்கையை மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.