மதுரை ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அரசு பள்ளியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 486 பயனாளிகளுக்கு 59.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். விழாவில் 6 புதிய அவசர ஊர்திகள் சேவை மற்றும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை நிதியமைச்சர் கொடிசையத்து தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜ், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்..,”  இரண்டு நாட்களுக்கு முன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பட்ஜெட்டில் கல்வி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். என்னென்ன சமுதாயங்களில் பெண்கள் முன்னேறுகிறார்களோ அந்த சமுதாயம் முன்னேறுகிறது.  எங்களுக்கும் பல கட்சிகள் செய்த ஆட்சிகளும் இரண்டு வேறுபாடு உள்ளது. மனித நேயத்துடன் மக்களுக்கான அக்கறையுடன் ஓவ்வொரு திட்டமும், ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு நிதி ஒதுக்கீடு செய்வது எங்களுடைய அடையாளம்.



ஆதரவற்றோர், பின் தங்கி இருப்பவர், இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர் அவர்களுக்கெல்லாம் எல்லாம் திட்டங்கள் போய் சேரவேண்டும் என்பது தான் எங்கள் முக்கியத்துவம், அதைத்தான் முதல்வர் சொல்கிறார் . எல்லோருக்கும் எல்லாம், அதைத்தான் நிதி அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும் நாம் திராவிட மாடல் என கூறுகிறோம். அதில் முதல் அடையாளம் மனித நேயம், மக்கள் பற்று, சமுதாய பற்று. இரண்டாவது ஒரே கொள்கை, ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர் கட்சியாக இருந்தாலும் , மேடையில் பேசினாலும், சட்டமன்றத்தில் பேசினாலும் எங்களுக்கு ஒரே கொள்கை தான். அதற்கு இரண்டு உதாரணமாக சொல்கிறேன். தாலிக்குத் தங்கம் திட்டம் பெயரில் இருந்து செயலில் இல்லாமல் 4 வருடமாக பின்தங்கி இருந்த திட்டத்தை நான் பார்த்தேன். அதை எப்போதும் சரி செய்ய முடியவில்லை, அதில் பல பிழைகள் உள்ளன. அதை திருத்த வேண்டும் காலத்திற்கு ஏற்ப மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ப என எண்ணி பள்ளியில் பயிலும் பெண்கள் கல்லூரி, பட்டயப்படிப்பு உள்ளிட்ட எது பயின்றாலும் அவர்கள் பயிலும் அனைத்து மாதமும் 1000 ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றி அமைத்து இருக்கிறோம்.



பள்ளி கல்வியில் மாணவிகள் தேர்ச்சி மதிப்பெண் திகமாக உள்ளது. ஆனால் கல்லூரி படிப்பில் மாணவிகள் பயிலும் சதவிகிதம் குறைவாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டே 1000ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்களுக்கு சிறந்த எதிர்காலம் திருமணம் என்று இருந்தது அது தற்போது சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது சமுதாயம் மாறியுள்ளது என்றார். தி.மு.க.,வினர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் கொள்கை அரசியல் வாதிகளாகவே இருந்து வருகிறோம். எங்களை பொறுத்த வரையில் அடிப்படைக் கொள்கைக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறோம். மக்களின் தேவைகளை நிறைவேற்றவே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம் என பேசினார்.