மதுரை வைகை ஆற்றில் 3ஆவது  நாளாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் - இரு கரைகளை உரசியபடி கடல் போல காட்சியளிக்கும் வைகையாறு - கண்டு ரசிக்கும் பொதுமக்கள்.


தடுப்பணை அருகே இருந்த ஆகாயத்தாமரை செடிகள் ஏ.பி.பி.,நாடு செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.


தேனி மாவட்டம் வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதோடு வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்காகவும் , திருமங்கலம் ஒருபோக பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று முன்தினம் காலை 5899 கன அடி நீரானது திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 4969 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் இன்று 3- வது நாளாக 3669 கன அடி நீராக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.






இந்நிலையில் 3- வது நாளாகவும்  மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. இதனால் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளகூடிய பகுதியான ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதி முழுவதிலும் வெள்ள நீரானது கடல் போல இரு புறங்களிலும் ஓடுவதால் ஏராளமான பொதுமக்களும் மேம்பாலத்தில் நின்றவாறு வெள்ளப்பெருக்கு ஓடுவதை பார்த்து ரசித்து வருகின்றனர்.




மேலும் தடுப்பணை அருகே இருந்த ஆகாயத்தாமரை செடிகள் ஏ.பி.பி.,நாடு செய்தி எதிரொலியாக அகற்றப்பட்ட நிலையில் வைகை ஆற்றை ஓட்டிய கோரிப்பாளையம் - தத்தனேரி வைகையாறு கரையோர பிரதான சாலைகளில் தண்ணீர் வடிந்ததால் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் செல்ல தொடங்கியது.
இருந்த போதிலும் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கையை மீறியும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் துணிதுவைப்பது, குளிப்பது, மீன்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். வைகையாற்று பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் இல்லாத நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக சென்றுவருவதால்  காவல்துறையினரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.